போபாலில் பாபா ராம்தேவ் கார் மீது காங்கிரஸார் கல்வீச்சு
போபால்: மத்திய பிரதேச தலைநகர் போபாலில் யோகா குரு பாபா ராம்தேவின் கார் மீது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
யோகா குரு பாபா ராம்தேவுக்கும், மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிக்கிற்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. ஒருவரையொருவர் தாக்கிப் பேசுவது வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் பாபா ராம்தேவ் இன்று மத்திய பிரதேசத்திற்கு சென்றுள்ளார். அம்மாநில தலைநகரான போபாலில் பாபா ராம்தேவின் கார் மீது காங்கிரஸார் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். ஆனால் அப்போது காரில் ராம்தேவ் இல்லை.
பாபா ராம்தேவ் திக்விஜய் சிங்கிற்கு எதிராகப் பேசுவதை கண்டித்தே இந்த தாக்குதல் நடந்துள்ளது. முன்னதாக கடந்த 17ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் எம்.பி.நகரில் உள்ள பதாஞ்சலி ஆரோக்ய கேந்திரா எனப்படும் ராம்தேவின் சிகிச்சை மையத்தை காங்கிரஸார் சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மையம் தாக்கப்பட்டதை அடுத்து மத்திய பிரதேசம் வரும் ராம்தேவுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொண்டனர். இந்நிலையில் தான் இன்று ராம்தேவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.