விருதுநகர் கலெக்டராக ஹரிஹரன் நியமனம்: அப்போ பாலாஜி?
சென்னை: விருதுநகர் மாவட்ட கலெக்டராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் இணை செயலாளராக இருந்த ஹரிஹரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை நியமனம் செய்வதில் ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கும், மாவட்ட கலெக்டர் பாலாஜிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் பணியாளர்கள் நியமனத்தைக் கலெக்டர் பாலாஜியே முன்னிருந்து நடத்தி பணி நியமன உத்தரவை வழங்கினார்.
இதனால் இந்த விவகாரம் குறித்தும், கலெக்டர் பாலாஜி குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை அதிமுகவினர் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர். இந்நிலையில் திடீரென கடந்த மாதம் அவர் மாற்றப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். (தற்போதும் அதே நிலை தொடர்கிறது).
இந்நிலையில் தமிழக அரசு தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
விருதுநகர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இணை செயலராக இருந்த டி.என். ஹரிஹரன் நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்பட்டுள்ளது.