செங்கோட்டையனிடமிருந்து அமைச்சர், கட்சிப் பதவி பறிப்பு: ஜெயலலிதா அதிரடி
இது தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். அவரது ஆலோசனையின் பேரில் ஒரு அமைச்சரை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக புதிய ஒரு அமைச்சரை நியமிக்க கவர்னர் கே.ரோசய்யா ஒப்புதல் வழங்கியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் வருவாய்த் துறை அமைச்சராக பணியாற்றியவர் கே.ஏ.செங்கோட்டையன். நேற்று மாலை இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய அமைச்சராக பெருந்துறை எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பதவி ஏற்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் 6-வது முறையாக அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
போட்டுக் கொடுத்தது மனைவி?
செங்கோட்டையனின் பதவி பறிப்புக்குக் காரணமாக சொல்லப்படுவது அவரது மனைவியும் மகனும்தான் என்று கூறப்படுகிறது. செங்கோட்டையனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக அண்மையில் ஜெயலலிதாவை சந்தித்து இருவரும் புகார் கொடுத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து செங்கோட்டையனை கூப்பிட்டு ஜெயலலிதா எச்சரித்தார் என்று கூறப்பட்டது. அதையும் மீறி செங்கோட்டையன் மீதான செயல்பாடு தொடர்ந்ததால் கல்தா கொடுக்கப்பட்டிருக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அமைச்சர் பதவியையும் மட்டுமின்றி செங்கோட்டையன் வகித்து வந்த தலைமை நிலைய செயலாளர் என்ற பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டிருக்கிறார்.