பெரம்பலூர் அருகே 9-ம் வகுப்பு மாணவனை சிறுநீர் குடிக்க வைத்த விவகாரம்- 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்
திருச்சி: பெரம்பலூர் அருகே பள்ளி மாணவனை சிறுநீர் குடிக்க வைத்ததாக எழுந்த புகாரில் பள்ளி ஆசிரியர் 3 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர் அருகே உள அகரம்சீகூர் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான் பரத்வாஜ் என்ற மாணவன். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்த மாணவர் விடுதி ஒன்றில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தான். அந்த விடுதியில் பள்ளி ஆசிரியர்கள் சிலரும் தங்கியுள்ளனர்.
கடந்த வியாழக்கிழமையன்று இரவு மாணவர்கள் மாத தேர்வுக்காகப் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது மாணவன் பரத்வாஜ் சிறுநீர் கழிக்க ஆசிரியர்களிடம் அனுமதி கேட்டிருக்கிறான். இதற்கு அனுமதி மறுத்த ஆசிரியர்கள் மாணவனை அடித்துள்ளனர். மேலும் சிறுநீர் குடி என்று வற்புறுத்தி பிரம்பால் அடித்துள்ளனர்.
இதனால் மாணவன் பரத்வாஜ் விடுதியை விட்டு தப்பி ஓடி வீட்டுக்கு சென்றிருக்கிறான். ஆனால் அங்கு அவனது தந்தை தேசிங்குராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதால் கும்பகோணம் மருத்துவமனைக்கு சென்று பெற்றோரிடம் நடந்ததைக் கூறியுள்ளான். இதையடுத்து கும்பகோணம் போலீசில் பரத்வாஜின் பெற்றோர் புகார் செய்தனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 ஆசிரியர்களையும் இடைநீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேற்குவங்கத்தில் வார்டன் ஒருவர் மாணவியை சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் போல் தமிழகத்திலும் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது