தறிகெட்டு நடக்கும் ஈ.வி.கே.எஸ்: முன்னாள் காங். எம்.பி. வள்ளல்பெருமான் தாக்கு
சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் எந்த எதிர்க்கட்சிக்கோ கையாளாக செயல்படுகின்றாரோ என்று முன்னாள் காங்கிரஸ் எம்.பி. வள்ளல்பெருமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காமராஜர் பிறந்த தினத்தன்று காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் ஞானதேசிகன் முன்னிலையில் இளங்கோவன், மத்திய அமைச்சர்களையும், கட்சியின் செயல்பாட்டையும் விமர்சித்திருப்பது மிகவும் கண்டத்திற்குரியது. இளங்கோவன் எப்போது பேசினாலும் ஒன்று மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளை தாக்குவது அல்லது காங்கிரசின் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை தாக்குவது என்கிற தவறான போக்கை நீண்டகாலமாக கடைபிடித்து வருகிறார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல்வேறு அரசியல் சவால்களை சந்தித்து தொடர்ந்து கடந்த 8 ஆண்டுகளாக காங்கிரஸ் தலைமையில் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து கூட்டணி கட்சிகளை இளங்கோவன் விமர்சித்து கொண்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். காங்கிரஸ் கட்சியினுடைய வளர்ச்சியிலோ அல்லது மத்திய அரசின் நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவோ அவருடைய கருத்துக்கள் இல்லாமல் குழப்பம் விளைவிக்கும் நோக்கமே பிரதானமாக இருக்கிறது. சில நேரங்களில் எல்லை மீறும் அவரது விமர்சனம் வேறு எந்த எதிர்க்கட்சிக்கோ கையாளாக செயல்படுகின்றாரோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றது.
மத்திய அரசில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணுகின்ற பணிகளில் ஈடுபட்டுள்ள மூத்த தலைவர் களைவிமர்சிப்பது என்பது அவருடைய அத்துமீறி செயல்டுகின்ற போக்கையே காட்டுகிறது. சில சமயங்களில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனிய காந்தி வரையிலே கூட நீள்கின்றது. கட்சிக்கு இப்படிப்பட்ட கருத்துக்கள் எப்படி ஆரோக்கியமானதாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
மூத்த மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அளவில் முக்கிய தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரத்தை தமிழக காங்கிரஸ் தலைமையில் நடைபெறும் காமராஜர் பிறந்த தினவிழா நிகழ்ச்சியில் விமர்சிப்பதை ஏன் ஞானதேசிகன் அனுமதித்தார் என்பதை கேட்க விரும்புகின்றேன்?
தலைமை அலுவலகத்தில் கட்சியை வளர்க்கின்ற நடவடிக்கைகள் நிகழ வேண்டுமே ஒழிய கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. அதுவும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் முன்னிலையிலேயே அரங்கேற்றுவது என்பது மிகவும் மோசமானதாகும். தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில் கட்டுப்பாட்டை கடைபிடித்து கட்சியை பலப்படுத்த வேண்டிய தருணத்தில் முன்னாள் மாநில தலைவர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த இளங்கோவன் தறிகெட்டு நடந்துக் கொள்வது தொண்டர்கள் மத்தியில் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற பொறுப்பற்ற பேச்சுகளின் மூலம் விளம்பரம் தேட முயற்சிப்பது மிகவும் மலிவானதாகும்.
மேலும் இப்படிப்பட்ட நடவடிக்கையின் மூலம் இளைஞர்கள் மத்தியில் காங்கிரஸ் மீது அவநம்பிக்கையை விதைக்கின்றார். ப.சிதம்பரத்தையும், சி.சுப்பிரமணியத்தையும் ஒப்பிட்டு விமர்சிக்கும் இளங்கோவன் பெரியாரின் இனிசியலை வைத்துக் கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று மனப்பால் குடிக்கின்றார். ஆனால் அவரது தந்தையாரோ அரசியலில் தோல்வி அடைந்ததை மறந்துவிட்டார் போலும்.
இதன் மீது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஞானதேசிகன் நடவடிக்கை என்ன? இதற்கு தகுந்த நடவடிக்கை இல்லையென்றால் கட்சி ஒற்றுமை என்பது வெறும் வாய் பேச்சாகும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications