கிரிமினல் நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று போலீஸார் டிஸ்மிஸ்: மதுரை எஸ்.பி. அதிரடி
மதுரை: லஞ்சம் வாங்குதல், மாமுல் வாங்குதல் போன்ற பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூன்று போலீசார் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தவர் ராஜேந்திரன். அதே போல உசிலம்பட்டி காவல் நிலையத்தில் காவலராக இருந்தவர் செல்வம். அவர்கள் இருவரும் கடந்த 2010ம் ஆண்டு வாகனங்களை நிறுத்தி மாமூல் வசூலித்ததாக தொடர்ந்து புகார்கள் எழுந்தது. இந்தப் புகார்கள் குறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், உசிலம்பட்டி நகரக் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணி புரிந்து வந்தவர் பொன்னுசாமி. அவர் கடந்த 2006ம் ஆண்டு விராலிமலையில் கஞ்சா கடத்திய வழக்கில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தவிர உசிலம்பட்டியில் ஒரு கொலை வழக்கிலும் அவருக்குத் தொடர்பு இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர் மீதும் துறைரீதியான விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில், அவர்கள் மூன்று பேரையும் டிஸ்மிஸ் செய்து மதுரை போலீஸ் சூப்பிரண்ட் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
மதுரையில் லஞ்சம் வாங்கும், மாமுல் வசூலில் ஈடுபடும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications