குரூப் 2 நேர்காணலில் கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
சென்னை: குரூப் 2 நேர்காணலில் கலந்து கொள்ளத் தவறியவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
குரூப் 2 பணிகளுக்கான நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் கடந்த ஜூன் 8ம் தேதி வெளியிடப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு நடைபெறும் நாள், நேரம் ஆகிய விவரங்கள் அடங்கிய நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தேர்வாணையம் குறிப்பிட்ட நாளில், நேரத்தில் நேர்முகத் தேர்வுக்கு தவிர்க்க முடியாத மற்றும் எதிர்பாராத காரணங்களால் வரமுடியாதவர்கள், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு தேர்வாணையத்தில் வரும் 26ம் தேதி பிற்பகல் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிலும் வரும் 27ம் தேதி முற்பகல் நடைபெறும் நேர்காணல் தேர்விலும் கலந்து கொள்ளலாம். அவர்கள், தங்களுக்கு ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விவரங்கள் அடங்கிய நேர்காணல் தேர்வுக்கான அழைப்பு கடிதத்தை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து எடுத்து வர வேண்டும். மேற்குறிப்பிட்ட நாளில் நேர்காணல் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் வருகை தரத் தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன்பின் நேர்காணல் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications