ராகிங் கொடுமையால் பேசும் திறனை இழந்த கல்லூரி மாணவி
ஹைதராபாத்: ஆந்திராவில் கல்லூரி மாணவியை ராகிங் செய்த சீனியர்கள் அவரது கழுத்தை கயிறை வைத்து இறுக்கியதில் குரல்வளை பாதிக்கப்பட்டு அவர் பேசும் திறனை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கோட்லாமில் உள்ள காயத்ரி ஜூனியர் கல்லூரியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி ஷாமிலி. கடந்த 19ம் தேதி இரவு கல்லூரி விடுதியில் மின்சாரம் இல்லாத நேரத்தில் சீனியர் மாணவிகள் சிலர் ராகிங் என்ற பெயரில் ஷாமிலி தனியாக இருந்தபோது அவரது அறைக்குள் புகுந்து கயிற்றால் அவரது கழுத்தை நெறித்துள்ளனர். இதில் ஷாமிலி காயம் அடைந்தார்.
அவரது அறையில் தங்கியிருந்தவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது ஷாமிலியால் பேச முடியவில்லை. அவரது கழுத்தில் கயிறு வைத்து இறுக்கிய தடம் இருந்தது. உடனே அவரை உள்ளூர் மருத்துவமனைக்கும், அதன் பிறகு விஜயநகரம் மாவட்ட மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கயிறை வைத்து இறுக்கியதில் ஷாமிலியின் குரல்வளை பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனால் அவரால் இனிமேல் பேச முடியாது என்றும் தெரிவித்தனர். இது குறித்து அறிந்த ஷாமிலியின் தந்தை தனது மகளை விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தார். அதன் பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சம்பவம் குறித்து ஷாமிலி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், எனது அறையில் தங்கியிருந்தவர்கள் சாப்பிடச் சென்றிருந்தனர். அப்போது விடுதியில் மின்சாரம் இல்லை. அறையில் நான் தனியாக இருந்தபோது சில மாணவிகள் வந்து என் கழுத்தை கயிறால் இறுக்கினர் என்று கூறியுள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications