மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு இன்று நினைவஞ்சலி: பாதுகாப்பு பணியில் 1,000 போலீசார்
நெல்லை: நெல்லை தாமிரபரணி ஆற்றில் குதித்து உயிர்நீத்த மாஞ்சோலை எஸ்டேட் தொழிலாளர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கொக்கிரகுளத்தில் இன்று நடக்கிறது.
மாஞ்சோலை தேயிலை எஸ்டேட் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு கடந்த 23-7-1999 அன்று நெல்லை கலெக்டரிடம் மனுகொடு்க்க வந்தனர். அப்போது போலீசாருக்கும், தொழிலாளர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 17 தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றில் குதித்து பலியாகினர். தாமிரபரணியில் மூழ்கி உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று நடக்கும் நினைவு தின நிகழ்ச்சியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் காலை 11 மணி முதல் 11.30 வரையும், புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எம்.எல்.ஏ. தலைமையில் மதியம் 1 மணி முதல் 2 மணி வரையும் அஞ்சலி செலுத்த போலீசார் நேரம் ஒதுக்கியுள்ளனர்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள், மள்ளர் நாடு, மள்ளர் மீட்பு கழகம், தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், எஸ்.சி., எஸ்.டி. ஊழியர் நல சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் அஞ்சலி செலுத்துகின்றனர். அஞ்சலி செலுத்த வருபவர்கள் புறப்படும் இடத்திலிருந்து தாமிரபரணி ஆற்றங்கரை உள்பட பல்வேறு பகுதிகளில் மாநகர போலீஸ் கமிஷனர் கருணாசாகர் தலைமையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.












Click it and Unblock the Notifications