சம்பள பிரச்சனை: ரூ.14 லட்சம் 'சரக்குடன்' லாரியை கடத்திய டிரைவர்
சென்னை: சென்னையில் லாரி உரிமையாளருடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனையில் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுநர், ரூ.14 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் ஏற்றிய லாரியை கடத்தி சென்றார். கடத்தப்பட்ட லாரியை கைப்பற்றிய போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர்.
சென்னை, கொளத்தூரை அடுத்த செந்தில் நகரை சேர்ந்தவர் வாசுதேவன்(32). ஒப்பந்த அடிப்படையில் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு மதுப்பாட்டில்களை விநியோகிப்பவர். மதுப்பாட்டில்களை விநியோகிக்கும் இவரது லாரியை, திருவண்ணாமலை மாவட்டம், செம்பியம் மங்களம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்(32) என்பவர் ஓட்டி வந்தார்.
இந்த நிலையில் கடந்த 21ம் தேதி அண்ணா நகர் பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளில் மது பாட்டில்கள் விநியோகிப்பதற்காக, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள டாஸ்மார்க் கிடங்கில் இருந்து மது பாட்டில்களை லாரியில் ஏற்றினர். ஆனால் இரவு 10 மணிக்கு மேலாகிவிட்டதால், அம்பத்தூர் டாஸ்மாக் மதுபான கிடங்கின் முன்பாக லாரியை பாஸ்கர் நிறுத்தி உள்ளார்.
லாரி லோடுமேன்கள் சென்ற பிறகு, லாரி உரிமையாளர் வாசுதேவனுக்கு போன் செய்த பாஸ்கர் தனது சம்பளம் குறித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாஸ்கர், லாரியை கடத்தி சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 22ம் தேதி காலையில் பாஸ்கரை செல்போனில் தொடர்பு கொள்ள வாசுதேவன் முயற்சி செய்தார். ஆனால் அவரது செல்போன் சுவிட் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ரூ.14 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்களுடன் லாரி கடத்தப்பட்டதாக, அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் வாசுதேவன் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரித்து வந்தனர். இதில் திருவண்ணாமலை அருகே கடத்தப்பட்ட லாரியுடன் பாஸ்கர் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், பாஸ்கரை கைது, கடத்தப்பட்ட லாரியை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பாஸ்கரிடம் விசாரித்த போது, சம்பளப் பிரச்சனை குறித்து எழுந்த வாக்குவாத்ததில் கோபமடைந்த பாஸ்கரன், உரிமையாளர் வாசுதேவனை பழிவாங்கும் வாங்கும் எண்ணத்துடன் லாரியை கடத்தியது தெரியவந்தது.












Click it and Unblock the Notifications