கருணாநிதிக்கு அமைச்சரவை விரிவாக்கம் பற்றி கவலையில்லையாம்..: தீவிரமான டெசோ தீர்மானமாம்..

சென்னையில் செய்தியாளர்கள் கருணாநிதியைச் சந்தித்துப் பேசினர். அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு வழக்கம் போல தனது பாணியில் பட்டும் படாமலும் பதிலளித்தார் கருணாநிதி.
செய்தியாளர்களின் கேள்விகளும், கருணாநிதி அளித்த பதில்களும்...
கேள்வி: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவியேற்பு விழாவில் திமுக சார்பில் யார் யார் பங்கேற்கிறார்கள்?
கருணாநிதி: கழகத்தைச் சேர்ந்த எல்லா மத்திய அமைச்சர்களும் - நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.
கேள்வி: இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தியும், தமிழ்நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் எல்லாம் பலமுறை கடிதம் எழுதியும் மத்திய அரசினுடைய வலியுறுத்தலை, இலங்கை கடற்படை பொருட்படுத்தாமல் தொடர்ந்து தமிழக மீனவர்கள்மீது தாக்குதல் நடத்தி வருகிறதே?
பதில்: நடைபெறவுள்ள டெசோ மாநாட்டில் அது பற்றி நாங்கள் தீவிரமான தீர்மானம் ஒன்றை நிறைவேற்றுவோம்.
கேள்வி: மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தில் திமுக இடம்பெறுமா?
பதில்: அதைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்டுள்ள கவலைகூட எனக்கு ஏற்படவில்லை.
கேள்வி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், கூட்டணிக்கட்சிகளுக்கு மதிப்பு அளிப்பதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் கூறியிருக்கிறதே?
பதில்: அது அவர்களுடைய கருத்து. எங்கள் கருத்து என்று எதுவும் சொல்லமுடியாது.
கேள்வி:- காவிரி நதிநீர் நடுவர் மன்றம் என்பது பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்று, அன்றைய பிரதமர் வாஜ்பாய்க்கு ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார். ஆனால், இப்போது அதே நடுவர் மன்றத்தைக் கூட்ட வேண்டுமென்று ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாரே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: அவர் பல் பிடுங்கப்பட்ட பாம்பு என்று சொல்லவில்லை; காவிரி நதிநீர் ஆணையத்தை பல்லில்லாத ஆணையம் என்று சொன்னார். காவிரி ஆணையத்தை அன்றைய பிரதமர் வாஜ்பாய், ஏற்பாடு செய்து அமைத்தபோது, ஜெயலலிதா அந்த ஆணையத்திற்கு வரமாட்டேன் என்று சொன்னார். அது பல்லில்லாத ஆணையம் என்று சொன்னார். அதுதான் அப்போது நடந்தது. இப்போது அந்த ஆணையத்தை கூட்ட வேண்டுமென்கிறார். அதை நான் வரவேற்றிருக்கின்றேன்.
கேள்வி: டெசோ மாநாடு ஏற்பாடுகள் எப்படி நடந்து கொண்டிருக்கின்றன?
பதில்: ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கேள்வி: 1986-ல் ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது சென்னையிலிருந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அப்போது டெசோ ரயில் மறியல் போராட்டத்திற்குஅழைப்பு விடுத்தது. அந்த அழைப்பை அறிந்தவுடனேயே, வெளியேற்ற உத்தரவை திரும்பப் பெற்றுக் கொண்டார்கள். ஆனால் இப்போது அந்த அளவுக்கு டெசோ அமைப்பு வலிமையாக இருக்குமா? தனி ஈழம் கோரிக்கையிலிருந்து பின் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறதே?
பதில்: தமிழ்ஈழம் என்பதிலிருந்து எங்கே நாங்கள் பின் வாங்கியிருக்கிறோம்? தனிஈழம் கோரிக்கை அப்படியே இருக்கிறது. தி.மு.கழகத்தைப் பொறுத்தவரையில் தனித் தமிழ்ஈழம் வேண்டும் என்ற அந்த கோரிக்கை கைவிடப்படவில்லை. கைவிடப்பட்டுவிட்டது என்று யாராவது சொன்னால், அவர்கள் மக்களால் கைவிடப்பட்டவர்கள் ஆவர். தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தனிஈழம் வேண்டுமென்பதை எங்களுடைய குறிக்கோளாக வைத்திருக்கிறோம். அந்தக் குறிக்கோள் நிறைவேறும் நிலை ஏற்படும்போது, படிப்படியாக நாங்கள் அதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
கேள்வி: இலங்கை ராணுவத்தினருக்கு மேற்கு வங்காளத்தில் பயிற்சி அளிப்பதாக சொல்லப்படுகிறதே?
பதில்: அப்படி பயிற்சி அளித்தால் நாங்கள் அதை எதிர்ப்போம் என்று சொன்னார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications