இப்போதைக்கு எனது கவனமெல்லாம் குஜராத் மீதுதான்-மோடி
டோக்கியோ: பிரதமர் பதவிக்குப் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு இப்போதைக்கு எனது கவனமெல்லாம் எனது மாநிலத்தின் மீது மட்டும்தான் என்று மழுப்பலான பதிலைக் கொடுத்துள்ளார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.
ஜப்பான் முதலீடுகளைக் கவருவதற்காக டோக்கியோ வந்துள்ளார் மோடி. அங்கு அவரிடம் செய்தியாளர்கள் பேசுகையில், பிரதமர் பதவிக்கான போட்டியில் நீங்களும் உள்ளீர்களா என்று கேட்டபோது, இப்போதைக்கு எனது கவனமெல்லாம் எனது மாநிலத்தின் வளர்ச்சி குறித்துத்தான் என்று கூறினார் மோடி.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என்று பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இப்படிக் கூறியிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அவர் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் இந்தியா பல துயரங்களைச் சந்தித்து வருகிறது. 2014ல் லோக்சபாவுக்குத் தேர்தல் வரும் என்றாலும் மத்திய குழப்ப அரசால், விரைவிலேயே வரக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன. வரும் லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும் வெற்றி பெறும். வாஜ்பாய் அரசின் நல்லாட்சி மீண்டும் மலரும் என்றார்.












Click it and Unblock the Notifications