2ஜி விவகாரத்தில் பிரதமரை ஆ.ராசா தவறாக வழி நடத்தினார்: சிபிஐ குற்றச்சாட்டு

அதே நேரத்தில் இந்த விவகாரத்தில் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரத்திடம் விசாரிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை என்றும், அவர் குற்றம் புரிந்ததற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் சிபிஐ கூறியுள்ளது. (இப்போது உள்துறை அமைச்சராக உள்ள சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ உள்ளது குறிப்பிடத்தக்கது).
சிபிஐ தலைவரான ஏ.பி.சிங் தலைமையிலான அதிகாரிகள் நாடாளுமன்ற கூட்டுக் குழு முன் இன்று ஆஜராகி இந்த விவரங்களைத் தெரிவித்தனர்.
பிரதமருக்கும், சிதம்பரத்துக்கும் 'க்ளீன் சிட்' கொடுத்துள்ளதன் மூலம் முழுப் பழியையும் ராசா மீது மட்டுமே சிபிஐயும் மத்திய அரசும் போட்டுள்ளன.
கூட்டுக் குழுவிடம் சிபிஐ அதிகாரிகள் அளித்துள்ள விளக்கத்தில், 2ஜி லைசென்ஸை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராசா தொடர்ந்து தவறான விவரங்களைத் தந்து அவரை தவறாக வழி நடத்தினார்.
2ஜி லைசென்ஸ்களின் விலை நிர்ணயத்திலோ அல்லது ஒதுக்கீட்டிலோ ப.சிதம்பரத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை. மேலும் (தயாநிதி மாறன் சம்பந்தப்பட்ட) ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்திலும் ப.சிதம்பரத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை.
2ஜி விவகாரத்தில் தொடர்புடைய எந்த தொலைத் தொடர்பு நிறுவனமும் அன்னிய செலாவணி முறைகேடு எதிலும் ஈடுபடவில்லை. அதே நேரத்தில் மொரீசியசில் உள்ள டெல்பி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது பங்குகளை ஒதுக்கீடு செய்தது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது என்றும்,
அதே போல 2ஜி லைசென்ஸ்கள் ஒதுக்கப்பட்ட அதே காலகட்டத்தில் ஐசில் ஆப் மேன் தீவுகளில் யூனிடெக் நிறுவனம் 51 மில்லியன் டாலரை முதலீடு செய்தது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இது 2ஜி லைசென்ஸ்களுக்காக தரப்பட்ட லஞ்சமாக இருக்கலாம் என சிபிஐ கருதுவது குறிப்பிடத்தக்கது.
2ஜி முறைகேடு நடந்து 14 மாதம் கழித்தே நடவடிக்கையில் இறங்கியது ஏன் என்று சில நாடளுமன்ற கூட்டுக் குழு உறுப்பினர்கள் சிபிஐ அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை வெளியான பிறகே இவ்வளவு பெரிய மோசடி நடந்தது தெரியவந்தது என்று சிபிஐ அதிகாரிகள் பதிலளித்தனர்.












Click it and Unblock the Notifications