பவார் கெடுவுக்கு பணிந்த காங்கிரஸ்: பேச்சுவார்த்தை மூலம் சுமூகத் தீர்வு கண்டது..

மன்மோகன்சிங் அமைச்சரவையில் பிரணாப் முகர்ஜி பிரதமருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். சரத்பவார் 3வது இடத்திலும், ஏ.கே. அந்தோணி 4வது இடத்திலும் இருந்தனர். பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்துவிட்ட நிலையில் இயல்பாகவே 3வது இடத்தில் உள்ள தமக்குத்தான் 2வது இடம் கிடைக்கும் என சரத்பவார் எதிர்பார்த்தார். ஆனால் மன்மோகன்சிங்கோ அந்த இடத்தை 4வது இடத்தில் இருந்த ஏ.கே. அந்தோணிக்கு ஒதுக்கினார்.
இதில் சரத்பவார் கடும் அதிருப்தி அடைந்தார். இதனால் அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தை சரத்பவார் புறக்கணித்தார். குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் பெயரை அறிவிக்கும் கூட்டத்தையும் புறக்கணித்தார். இந்நிலையில் கடந்த 19ம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் சரத்பவார் மற்றும் தேசியவாத காங்கிரசின் மற்றொரு அமைச்சரான பிரபுல் பட்டேல் இருவரும் கலந்து கொள்ளவில்லை.
இதையடுத்து பவாரும், பிரபுல் பட்டேலும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கொடுத்தனர். ஆனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பவாரை சமாதானப்படுத்தினார். இதற்கிடையே பவார் தங்கள் கோரிக்கைகளை ஒரு கடிதமாக எழுதி பிரதமருக்கு அனுப்பினார். இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை இன்றுக்குள் அதாவது 24 மணி நேரத்திற்குள் நிறைவேற்றாவிட்டால் மத்திய அரசில் இருந்து விலகிவிடுவோம் என்று பவார் எச்சரித்தார். இதையடுத்து பவார் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பவாரின் கோரிக்கைகளை காங்கிரஸ் ஏற்றது. இதையடுத்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இடையே இருந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு தான் வெளியாகவிருக்கிறது. அப்போது தான் என்னென்ன கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று தெரிய வரும்.












Click it and Unblock the Notifications