வாலிபரை சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர்: காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்..
நெல்லை: நாங்குநேரி அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வாலிபர் இறந்தார். இதையடுத்து துப்பாக்கிச்சூடு நடத்திய நாங்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதோடு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் வானமாமலை என்ற வாலிபர் பலியானார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் மறுகால்குறிச்சி கிராமத்தினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடத்திய நாங்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயகுமார் இடமாற்றம் செய்யப்பட்டதோடு அவருக்கு பணி வழங்காமல் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடுக்கு காரணம் மாமுல் பிரச்சனையா?
நாங்குநேரி அருகேயுள்ள பெரியகுளத்தில் கரம்பை மண் அள்ளுவது தொடர்பாக 2 பிரிவினரிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இதில் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவர் குளத்தில் மண் அள்ளுவதற்கு குத்தகை எடுத்துள்ளார். அவர் லாரியில் மண் அள்ளுவதற்கு லோடுக்கு ரூ.300 வரை வசூல் செய்து வந்துள்ளார். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவி்த்து பணம் கொடுக்காமலேயே மண் அள்ளினர். ஆளும் கட்சி பிரமுகர் நாங்குநேரி போலீஸ் அதிகாரியை கையில் வைத்துக் கொண்டு பணம் கொடுக்காமல் மண் அள்ளுபவர்களுக்கு போலீசார் மூலம் டார்ச்சர் கொடுத்துள்ளார்.
போலீசாரும் மாமூல் பெற்று கொண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்குகு முன் குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளியதாக வானுமாமலையின் தம்பி முருகனை போலீசார் கைது செய்தனர். ஆனால் அவர் மற்றொரு போலீஸ் அதிகாரிக்கு மாமூல் கொடுத்துள்ளார். அதையும் மீறி அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்தனர். இதையறிந்த வானுமாமலை இன்ஸ்பெக்டர் விஜயகுமாரிடம் சென்று தகராறு செய்தார். துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஆளும் கட்சி பிரமுகருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு்ள்ளது. மண் அள்ளுவதில் ஏற்பட்ட மாமுல் பிரச்சனையால் வாலிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications