திருச்சியில் முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன், மகன்கள், மருமகன்கள் கைது: பதட்டம்
திருச்சி: தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் விஸ்வநாதன் திருச்சி போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
திருச்சியில் வீர முத்தரயைர் பேரவையைச் சேர்ந்த செல்வகுமார் என்பவரது வீட்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து செல்வகுமார் எடமலைப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் தமிழ்நாடு முத்தரயைர் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.விஸ்வநாதன், அவரது மகன்கள் ராம்பிரபு, பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர், தர்மராஜ் உள்ளிட்ட 5 பேரை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 5 பேரையும் திருச்சி ஜே.எம். 2 நீதிமன்றத்தில் நீதிபதி ராஜேந்திரன் முன்னிலையில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் உள்ளிட்ட 5 பேரையும் ஆகஸ்ட் 9ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அந்த 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
விஸ்வநாதன் கைது செய்யப்பட்டதால் திருச்சியில் பதட்டமாக உள்ளது. இதையடுத்து திருச்சி நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.