அசாம் இனவன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 58: முதல்வர் தருண் கோகாய்க்கு நெருக்கடி?
கோக்ரஜார்:அசாமில் கோக்ரஜார்,சிராங் உள்ளிட்ட மாவட்டங்களில் போடோ இனத்தவருக்கும் சிறுபான்மை இனத்தவருக்கும் இடையேயான வன்முறை தொடந்தும் நீடித்து வருகிறது. சிராங் மாவட்டத்தில் மேலும் 14 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஒருவார காலமாக மோதல் நீடித்து வரும் நிலையில் நேற்றுதான் வன்முறை பாதித்த இடங்களை அசாம் முதல்வர் தருண் கோகாய் பார்வையிட்டார். இது அனைத்துக் கட்சியினரிடமும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மேலிடமும் தருண் கோகாய் மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவே கூறப்படுகிறது. இதன் எதிரொலியாகவே காங்கிரஸ் கட்சி 10 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு ஒன்றை தற்போது அசாமில் உருவாக்கியிருக்கிறது.
சில காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிப்படையாகவே கோகாயை விமர்சனம் செய்துள்ளனர். காங்கிரஸ் எம்.பி. ரஹ்மான் கான் கூறுகையில், தருண் கோகாயை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இத்தனை லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ள நிலையில் அவர்களுக்கான மறுவாழ்வு என்பது மிகவும் முக்கியமானது. ஆனால் மாநில முதல்வர் நேற்றுதான் சம்பவ இடங்களையே பார்வையிட்டிருக்கிறார் என்று கடிந்திருக்கிறார். இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடமும் அவர் புகார் கூறியுள்ளார்.
கடந்த ஒருவார காலமாக நடைபெற்று வரும் வன்முறையில் மொத்தம் 58 பேர் பலியாகி உள்ளனர். 2 லட்சம் பேர் அகதிகளாக 400க்கும் மேற்பட்ட கிராமங்களைவிட்டு முகாம்களில் தஞ்சமடைந்திருக்கின்றனர். பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் மேற்குவங்க மாநிலத்துக்கு அகதிகளாக சென்றுள்ளனர். வன்முறையில் ஈடுபடுவோரை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஒருவார காலமாக அமலில் இருந்த ஊரடங்கு உத்தரவு சில இடங்களில் குறிப்பிட்ட நேரம் தளர்த்தப்பட்டும் வருகிறது.












Click it and Unblock the Notifications