தமிழகத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு: 50க்கும் மேற்பட்ட வாகனங்களின் உரிமம் ரத்து
சென்னை: சென்னை ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக அப்பள்ளி மாணவி ஸ்ருதி கீழே விழுந்து பலியானதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. அப்போது நல்ல நிலையில் இல்லாத 50க்கும் மேற்பட்ட வாகனங்களின் உரிம்ம் ரத்து செய்யப்பட்டது.
சென்னை ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்த மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து பலியானார். இதையடுத்து தமிழக அரசின் உத்தரவின்பேரில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மற்றும் கல்வித் துறை அதிகாரிகளை கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த ஆய்வின்போது தரமில்லாத வாகனங்கள், உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டு வந்த வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் முதலுதவிப் பெட்டி, தீயணைப்புக் கருவி இல்லாத வாகனங்களில் அவற்றை உடனே பொருத்த அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகம், பள்ளி மற்றும் கல்லூரி மைதானங்களுக்கு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. சென்னை சின்மயா நகர் போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்த வாகனங்களை ஆர்.டி.ஓ. ரவிச்சந்திரன் ஆய்வு செய்தார். கே.கே. நகரில் உள்ள மைதானத்திற்கு 57 பள்ளி வாகனங்கள் மற்றும் 31 கல்லூரி வாகனங்கள் ஆய்வுக்காக வந்தன. அவற்றை ஆய்வு செய்த அதிகாரிகள் 3 பள்ளி வாகனங்கள் மற்றும் 1 கல்லூரி வாகனத்தின் உரிமத்தை ரத்து செய்வது குறித்து நோட்டீஸ் அனுப்பினர்.
இது தவிர சென்னை புறநகர் பகுதியில் உள்ள 65 பள்ளிகள், கல்லூரிகளி்ன் 250 பேருந்துகளை மீனம்பாக்கம் வட்டாரப் போககுவரத்து அதிகாரி தினகரன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கோவை மற்றும் நீலகிரி மவாட்டங்களில் ஆய்வு செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் மற்றும் வேன்களில் பலவற்றின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது. மேலும் பழுதடைந்த வாகனங்களை 2 நாட்களுக்குள் பழுதுபார்க்கும்படி உத்தரவிடப்பட்டது.
இதுபோன்று திருப்பூரில் 41 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் நடந்த ஆய்வின்போது 54 பள்ளி, கல்லூரி வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 10 வாகனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் 500 பேருந்து மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டதில் உரிய அனுமதி இல்லாமல் இயக்கப்பட்டு வந்த சில வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போன்று கடலூர் மாவட்டத்தில் 250 பேருந்து மற்றும் வேன்கள் ஆய்வு செய்யப்பட்டதில் அனுமதி சீட்டு, தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம் இல்லாத 4 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருச்சியில் நடத்தப்பட்ட ஆய்வில் ஒரு வாகனத்தின் தகுதிச்சான்றை அதிகாரிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர். கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் நடந்த ஆய்வின்போது திருவாரூரில் இயக்கப்பட்டு வந்த நாகை மாவட்ட பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை போலீஸ் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அதில் பழையதாக இருந்த வாகனங்களை உடனே மாற்ற அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்த ஆய்வின்போது 8 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள் 10 ஆண்டு அனுபவம் இல்லாமல் வாகனம் ஓட்டிய டிரைவர் ஒருவரைப் பிடித்தனர். தேனி மாவட்டத்தில் 278 பள்ளி வாகனங்களும், 102 கல்லூரி வாகனங்களும் ஆய்வு செய்யப்பட்டதில் 19 வாகனங்களின் தகுதிச்சான்று தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் நெல்லை வட்டார போக்குவரத்து அதிகாரி முத்துசாமி தலைமையில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகி்ன்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் 356 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில் 20 வாகனங்களில் சிறிய பழுதுகள் இருந்தது. அதை சரிசெய்து விட்டு வந்து காண்பிக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். கடந்த 2 நாட்கள் நடந்த ஆய்வில் கலந்து கொள்ளாத வாகனங்கள் இன்று ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும் இந்த ஆய்வுக்கு வராத வாகனங்களை இயக்கக் கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications