நெல்லூர் ரயில் விபத்து: சென்னையில் புதுக்குடித்தனம் துவங்கவிருந்த புதுமண தம்பதி பலி
விஜயவாடா: சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் நெல்லூரில் தீப்பிடித்துக் கொண்டதில் பலியானவர்களில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புதுமணத் தம்பதியும் அடக்கம்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கே. வெட்கடரமணா(24). சாப்ட்வேர் என்ஜினியர். சென்னையில் உள்ள போர்டு நிறுவனத்தில் பணி புரிந்து வந்தார். அவருக்கும் ஆந்திர மாநிலம் அனிமலபேட்டைச் சேர்ந்த பல்லவிக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் சில சடங்குகள் முடிக்க வேண்டும் என்று கூறி பல்லவியை அவரது தாய் வீட்டில் தங்க வைத்தனர். இந்நிலையில் எம்.சி.ஏ. முடித்துள்ள பல்லவி வேலை தேடி வந்தார்.
வெங்கடரமணா மட்டும் சென்னைக்கு திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திரா சென்ற வெங்கடரமணா கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனைவியுடன் தனது கிராமத்தி்ற்கு சென்றார். அங்கு செய்ய வேண்டிய சடங்குள் எல்லாம் முடிந்ததும் அவர் மனைவியை அழைத்துக் கொண்டு சென்னைக்கு புறப்பட்டார். அவர்களுடன் பல்லவியின் தாய் நாகராணியும் வந்தார்.
அவர்கள் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 பெட்டியில் பயணம் செய்தனர். நேற்று அதிகாலை நெல்லூரில் அந்த ரயிலில் அதுவும் குறிப்பாக அவர்கள் பயணித்த பெட்டியில் தான் தீப்பிடித்தது. இதில் அதில் பயணம் செய்த 32 பேர் உடல் கருகி பலியானார்கள். அதில் புதுமணத் தம்பதியும், பல்லவியின் தாயும் அடக்கம்.
மனைவியுடன் சென்னையில் புதுக்குடித்தனம் நடத்தும் கனவுகளுடன் வந்த வெங்கடரமணா, பல்லவி ஆகியோர் கரிக்கட்டையாகினர். இந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications