குண்டுவெடிப்பு கிடக்குது விடுங்க, ராஜீவ் இடத்தில் ராகுல் தெரியறார் பாருங்க... ஷிண்டே 'ஜிங் சக்'
ராஜீவ் காந்தி இருந்த இடத்தில் ராகுல் காந்தியை தான் பார்ப்பதாகவும், அவருடைய தலைமையின் கீழ் செயல்பட ரொம்ப ஆர்வப்படுவதாகவும் பேசி புல்லரிக்க வைத்துள்ளார்.
நேற்று காலையில்தான் உள்துறை அமைசசராகப் பதவியேற்றார் ஷிண்டே. ஆனால் மாலையிலேயே புனேயில் ஐந்து இடங்களில் குண்டை வெடித்து விட்டார்கள். குண்டு வெடித்த ஒரு இடத்திற்கு ஷிண்டே வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ரத்தாகி விட்டது.
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த இடத்தைப் பார்வையிட்ட கையோடு டெல்லிக்குக் கிளம்பி வந்து விட்டார் ஷிண்டே. இன்று செய்தியாளர்களையும் சந்தித்தார். அப்போது வழக்கம் போல ராகுல் காந்தி புராணம் பாடி அனைவரையும் புல்லரிக்க வைத்தார்.
அவர் பேசுகையில், பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையில் முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. அவர் அப்பதவியில் சிறப்பாக செயல்பட்டார்.
கூறியுள்ளார்.
ப.சிதம்பரம், மும்பை பயங்கரவாத தாக்குதல் உள்ளிட்டவற்றைத் திறம்பட கையாண்டார். அவர் எடுத்த நடவடிக்கைகளில் எனக்கு முழு திருப்தி உள்ளது. அவர் வகுத்த கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட உள்ளேன். அவரிடம் அவ்வப்போது ஆலோசனைகளை கேட்க உள்ளேன்.
நாட்டில், 1960ம் ஆண்டு முதல் தொடர்ந்து வரும் மாவோயிஸ்ட் விவகாரத்தை, ஒரே இரவில் தீர்த்து விட முடியாது. அவர்களையும் தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
தேசிய பயங்கரவாத தடுப்பு மையம் அமைப்பது குறித்த விவகாரத்தில், ஒருமித்த கருத்து ஏற்படுத்தும் நடவடிக்கையில் சிதம்பரம் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியா ஜனநாயக நாடாகும். இங்கு மாநிலங்கள், கட்சிகள் என பல பாகுபாடுகள் இருக்கும் போதிலும், நாட்டின் பாதுகாப்பை மையமாக வைத்து, இந்த தேசிய பயங்கரவாத தடுப்பு மையத்தை அமைக்க சிதம்பரம் நடவடிக்கை மேற்கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கட்சிகள் விரைவில், தங்களது நிலைமையை மாற்றிக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
பின்னர் மறக்காமல் ராகுல் காந்தி குறித்துக் கறுகையில்,ஆட்சி மற்றும் கட்சியில் ராகுல் காந்தி செயல்பட வேண்டும். அதை நாங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளோம். முன்னாள் பிரதமர் ராஜிவ் இருந்த இடத்தில் ராகுலை நான் பார்க்கிறேன் என்று கூறியபோது ஷிண்டே கண்ணில் ஒளி தெரிந்தது.....
சுஷில் குமார் ஷிண்டே இப்படி ராகுல் தெரிகிறார், ராஜீவ் தெரிகிறார் என்று பேசுவதை விட்டு விட்டு உள்நாட்டுப் பாதுகாப்பைப் பலப்படுத்துவது குறித்து அக்கறை காட்டாவிட்டால் மக்கள் கண்ணில் சுஷில் குமார் ஷிண்டேவுக்குப் பதில் சாயாஜி ஷிண்டேதான் தெரிவார் என்பதில் சந்தேகமில்லை...