பூரி ஜெகநாதர் ஆலயத்துக்குள் நுழைந்த அமெரிக்கர்- பாதுகாப்பு அதிகாரிகளால் தாக்கப்பட்டதால் சர்ச்சை
புவனேஸ்வர்: உலகப் புகழ்பெற்ற ஒடிஷாவின் பூரி ஜெகநாதர் ஆலயத்துக்குள் நுழைந்த அமெரிக்கருக்கு அடி விழுந்ததால் அது சர்ச்சையாகி உள்ளது.
"ஆச்சாராமான இந்துக்களுக்கு மட்டுமே உள்ளே நுழைய அனுமதி" என்பதுதான் பூரி ஜெகநாதர் ஆலயத்தில் காணப்படும் முதன்மையான வாசகம். இந்து மதத்தவர் தவிர வேறு எந்த மதத்தவரும் எந்த உயர்பதவியில் இருந்தாலும் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்படுவர்.
அண்மையில் நடைபெற்ற பூரி தேரோட்டத்தின் போது அமெரிக்காவைச் சேர்ந்த நோயல் மஜீ என்பவர் பூரி ஜெகநாதரை தரிசக்க வந்து தரும அடி வாங்கிப் போயிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஒடிஷாவில் உள்ள அவரது மனைவி ஷில்பி போரல், இது அநீதியானது. பூரி ஜெகநாதர் அனைவருக்கும் பொதுவானர். அப்படி இருக்கும்போது எனது கணவருக்கு எப்படி அனுமதி மறுக்கலாம்? என்று கேள்வி கேட்டதுடன் போலீசிலும் புகார் செய்துவிட்டார்.
போலீசும் அமெரிக்கரைத் தாக்கியதாக கோயில் பாதுகாப்பு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பூரி சங்கராச்சாரி, வெளிநாட்டவரிடம் பாதுகாப்பு அதிகாரிகள் நடந்து கொண்டவிதம் சரியானது அல்ல என்றார். மேலும் அவர்களிடம் கோயில் விதிகளைப் பற்றி கூறி வேண்டுகோள் விடுக்கலாமே தவிர இப்படியான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுவரை அனுமதி மறுக்கப்பட்ட பெருந்தலைகள்
1977- ஆம் ஆண்டு இஸ்கான் அமைப்பின் நிறுவனர் பக்தி வேதாந்த ஸ்வாமி பிரவுபதா பூரி ஜெகநாதர் கோயிலுக்கு வருகை தந்திருந்தார். அவருக்கு மட்டும் அனுமதி கொடுத்த நிர்வாகம் அவரது பக்தர்கள் கோயிலுக்குள் அடி வைக்கக் கூடாது என்று எச்சரித்திருந்தது.
பூரி ஜெகநாதர் கோயிலுக்கு 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா காந்தி வருகை தந்தார். ஆனால் அவரை அனுமதிக்க கோயில் நிர்வாகம் மறுத்துவிட்டது. காரணம் இந்திரா காந்தி திருமணம் செய்து கொண்ட பெரோஸ் காந்தி ஒரு பார்சி இனத்தவர் என்பதுதான்.
2005-ம் ஆண்டில் தாய்லாந்து மகாராணி மஹாசக்ரி ஸ்ரீதரனுக்கு கோயிலுக்கு உள்ளே அனுமதி மறுக்கப்பட்டது. இதற்குக் காரணம் அவர் புத்த மதத்தைப் பின்பற்றுகிறார் என்பதுதான்.
2006-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த எலிசபத் ஜிக்லெர் என்பவர் ரூ1.78 கோடி காணிக்கை கொடுத்தார். காணிக்கையை ஏற்றுக் கொண்டாலும் அவர் கிறித்துவர் என்பதால் உள்ளேவிட அனுமதி மறுத்துவிட்டது கோயில் நிர்வாகம்.












Click it and Unblock the Notifications