ரூபாய் நோட்டை கீழே போட்டு கொள்ளையடிக்கும் திருச்சி கும்பல் கேரளாவில் கைது: மேலும் 4 பேருக்கு வலை
திருவனந்தபுரம்: காரில் வருபவர்களின் கவனத்தை திசை திருப்பி கொள்ளையடிக்கும் திருச்சி கும்பலைச் சேர்ந்த 4 பேரை திருச்சூர் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஜிஜோ மேத்யூ. அவர் கடந்த 28ம் தேதி செட்டியங்காடு பகுதி சாலையோரத்தில் காரை நிறுத்திவிட்டு சில பொருட்கள் வாங்கியுள்ளார். திரும்பி வந்து காரை திறந்து பொருட்களை வைத்தபோது கீழே ரூபாய் நோட்டு கிடப்பதாக வாலிபர் ஒருவர் அவரிடம் கூறியுள்ளார். உடனே அந்த பணத்தை மேத்யூ வேகமாகச் சென்று எடுத்துள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது காரில் வைத்திருந்த ரூ.52,000 ரொக்கம் இருந்த பை, லேப்டாப், கேமரா போன்ற பொருட்களை காணவில்லை.
இது குறித்து திருச்சூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி திருச்சி ராம்ஜி நகரைச் சேர்ந்த முத்துகுமார், ஆறுமுகம், பாலமுருகன், மாரிமுத்து ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் 8 பேர் அடங்கிய கும்பலாக பல இடங்களுக்கு சென்று கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். பழனியில் அறை எடுத்து தங்கும் அவர்கள் அங்கிருந்து பேருந்தில் கேரளா செல்வர். பின்னர் 4 பேர் கொண்ட குழுவாக பிரிந்து கொள்ளையில் ஈடுபடுவர். மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications