ஆந்திராவில் கீழே விழுந்த ஒரு ரூபாயை எடுத்தபோது பள்ளிப் பேருந்து ஏறி 1வது வகுப்பு மாணவி பலி
ஹைதராபாத்: ஆந்திராவில் தரையில் விழுந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுக்க முயன்ற 1வது வகுப்பு மாணவி மீது பள்ளிப் பேருந்து ஏறியதில் அவர் பரிதாபமாக உயிர் இழந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம், பத்தலபள்ளியை அடுத்து உள்ள எம்.செர்லோபள்ளி கிரமாத்தைச் சேர்ந்தவர் சிவலட்சுமி. அவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் முதல் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை பள்ளிப் பேருந்தில் பள்ளிக்கு சென்றார். பேருந்து பள்ளியை அடைந்ததும் கீழே இறங்கியபோது அவரது பெற்றோர் கொடுத்த ஒரு ரூபாய் நாணயம் கீழே விழுந்து பேருந்துக்கு அடியில் சென்றது.
இதைப் பார்த்த சிறுமி காசை எடுக்க பேருந்துக்கு அடியில் சென்றார். சிறுமி பேருந்துக்கு அடியில் சென்றதை கவனிக்காத டிரைவரை வண்டியை எடுத்தார். அப்போது பேருந்தின் சக்கரம் சிறுமி மீது ஏறியது. இதில் சிவலட்சுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த அவரது பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்து தங்கள் மகளின் உடலைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.