புதுவை கோவிலில் வைத்து மந்திரங்கள் முழங்க இந்து பெயர் சூடிய 23 இத்தாலியர்கள்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் 23 இத்தாலியர்கள் தங்கள் பெயரை மாற்றி இந்து கடவுள்களின் பெயரை வைத்துக் கொண்டனர்.
இத்தாலியில் உள்ள வாடிகன் நகரைச் சேர்ந்த ப்ளாவியோ(35) என்பவர் தனது நாட்டைச் சேர்ந்த சிலருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தார். அப்போது அவர்கள் திருவண்ணாமலை, தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள கோவில்களுக்கு சென்று சுற்றிப் பார்த்தனர். இந்நிலையில் இந்து மதத்தின் மீது ப்ளாவியோவுக்கு ஈடுபாடு ஏற்பட்டது. மேலும் வேத மந்திரங்களை கற்க வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது.
இதையடுத்து வேதம் கற்பிக்கும் குருவை அவர் இணையதளத்தில் தேடினார். அப்போது புதுச்சேரியைச் சேர்ந்த ராஜா சாஸ்திரி பற்றி தெரிந்து கொண்டார். அவர் கடந்த 2001ம் ஆண்டு சாஸ்திரியை அணுகி வேத மந்திரங்கள் கற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார். சாஸ்திரியும் இத்தாலிக்கு சென்று ப்ளாவியோ உள்ளிட்டோருக்கு வேத மந்திரங்ள் கற்றுக் கொடுத்துவிட்டு வந்தார். அவர்களும் இந்தியா வரும்போதெல்லாம் மேலும் பல மந்திரங்களைக் கற்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு தங்கள் பெயரை மாற்றி இந்து பெயர் வைக்க விரும்பினர். இதையடுத்து ப்ளாவியோ உள்ளிட்டோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்து தங்கள் விருப்பத்தை ராஜா சாஸ்திரியிடம் தெரிவித்தனர். அவர்களின் விருப்பப்படியே ப்ளாவியோ உள்ளிட்ட 23 பேருக்கு இந்து பெயர் வைக்கும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் கோமாதா கோவிலில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியையொட்டி கோ பூஜை, சிவ யாகம் ஆகியவை நடத்தப்பட்டன. வேத மந்திரங்கள் முழங்க ராஜா சாஸ்திரி முன்னிலையில் அவர்கள் சிவதீட்சை என்னும் மந்திர உபதேசம் பெற்றனர். ப்ளாவியோ தனது பெயரை சிவானந்தம் என்றும், அவரது மனைவி ஸ்டெபனியா தனது பெயரை சாவித்ரி என்றும் மாற்றிக் கொண்டனர். இதே போன்று அவர்களுடன் வந்திருந்த மற்ற இத்தாலியர்களும் தங்கள் பெயரை மாற்றி இந்து பெயர் வைத்துக் கொண்டனர்.
இது குறித்து ப்ளாவியோ கூறுகையில்,
சுற்றுலாவுக்காக இந்தியா வந்த இடத்தில் இந்து மதம் எங்களை ஈர்த்தது. இதையடுத்து நாங்கள் வேத மந்திரங்கள் கற்று எங்கள் பெயரை இந்து பெயராக மாற்றியுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications