மு.க.ஸ்டாலின், டைம்ஸ் ஆப் இந்தியா மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

ஜெயலலிதா சார்பில் மாநகர அரசு வழக்கறிர் ஜெகன், சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,
கடந்த 2ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையில், காலராவை தடுக்க தி.மு.க. தொண்டர்கள் தெருக்களில் இறங்கியுள்ளனர் என்று பொருள்படும்படி செய்தி வெளியாகி இருக்கிறது. அந்த செய்தியில், சென்னை மாநகரம் முழுவதும் பாதிக்கப்பட்டு இருக்கும் இந்த வேளையில், முதல்வர் எப்படி விடுமுறையில் இருக்க முடியும்? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று மு.க. ஸ்டாலின் பேசியதாக செய்தி வெளியாகி உள்ளது.
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசியது முற்றிலும் பொய்யானது, அவதூறானது, அடிப்படை ஆதாரமற்றது.
சென்னை நகரம் முழுவதும் காலராவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக மு.க. ஸ்டாலின் உண்மைக்கு புறம்பாக பேசியதை, டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை வெளியிட்டுள்ளது.
மக்களின் நலனுக்காக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
இந்த நிலையில், மு.க. ஸ்டாலினும், அவரது பேச்சை பிரசுரித்த பத்திரிகையும் உள்நோக்கத்துடன் நடந்து கொண்டுள்ளனர். எம்.எல்.ஏவாக இருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வரின் செயல்பாடுகள் நன்றாக தெரியும். அது தெரிந்திருந்தும், அவர் உள்நோக்கத்துடன் பேசியதை டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த செய்தி நல்ல நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை. எனவே மு.க. ஸ்டாலினையும், அவரது பேச்சை வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகையின் பதிப்பாளர் மற்றும் வெளியீட்டாளர், ஆகியோரையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக இதே போல தேமுதிக தலைவர் விஜய்காந்த் மீதும் அவரது செய்தியை வெளியிட்ட இந்து பத்திரிக்கை மீதும் ஜெயலலிதா அவதூறு வழக்குத் தொடர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications