சுதந்திர தினம்: சென்னை ஏர்போர்ட்டில் 7 அடுக்கு பாதுகாப்பு-பார்வையாளர்களுக்கு தடை
சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதையடுத்து நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. சுதந்திர தினத்திற்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்றே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் விமான நிலைத்திற்குள் செல்ல பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடை இன்று முதல் வரும் 20ம் தேதி வரை அமலில் இருக்கும். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கார் நிறுத்துமிடத்தில் தீவிர சோதனை நடந்து வருகிறது. மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் விமான நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தி வருகின்றனர். வரும் 14ம் தேதி பாதுகாப்பு ஏற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டையில் வரும் 9,11 மற்றும் 13 ஆகிய 3 தேதிகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடக்கவிருக்கிறது. இதனால் நேப்பியர் பாலத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை உள்ள காமராஜர் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. விமான நிலையம் தவிர சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நேற்று முன்தினம் மனநோயாளி ஒருவர் சென்ட்ரலில் உள்ள மணிக்கூண்டில் ஏறி போலீசாரை படாதபாடு படுத்தினார். பல மணிநேரம் போராடி பத்திரமாக மீட்கப்பட்ட அவர் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசாரை பாடாய்படுத்தும் மனநோயாளிகளை கட்டுப்படுத்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ள ரயில்வே போலீசாருக்கு கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்றவர்கள் கடும் சோதனைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இந்த சோதனை சுதந்திர தின நிகழ்ச்சிகள் முடியும் வரை நடத்தப்படும் என்று தெரிகிறது.