என் மீது ஊழல் வழக்குத் தொடர எதியூரப்பா சதி: சதானந்த கெளடா

என் மீது வழக்குத் தொடர எனது சொத்து விவரங்களை எதியூரப்பா சேகரித்து வருகிறார் என்று கர்நாடக முன்னாள் முதல்வரான சதானந்த கெளடா குற்றம் சாட்டியுள்ளார்.
சுரங்க ஊழல், நில ஊழல்களால் முதல்வர் பதவியிலிருந்து இறக்கப்பட்டார் எதியூரப்பா. அவரது பரிந்துரையின்பேரில் தான் சதானந்த கெளடாவை முதல்வராக்கியது பாஜக தலைமை.
ஆனால், முதல்வரானதும் எதியூரப்பா மீதான வழக்குகளை நீர்த்துப் போகச் செய்ய சதானந்த கெளடா உதவவில்லை. மாறாக எதியூரப்பா மீதான வழக்குகளை தீவிரமாக்கினார்.
இதையடுத்து அவரைத் தூக்கிவிட்டு தனது ஜாதியைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க பாஜக தலைமைக்கு நெருக்கடி தந்து அதில் வெற்றியும் பெற்றார் எதியூரப்பா.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய சதானந்த கெளடா, எனக்கு கர்நாடக மாநில பாஜக தலைவர் பதவி கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக எதியூரப்பா சதிச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பெங்களூர், மங்களூரில் உள்ள எனது சொத்துக்கள் குறித்து தனது ஆட்கள் மூலம் கணக்கெடுத்து வருகிறார்.
இதை வைத்துக் கொண்டு என் மீது போலியாக வழக்குப் போடவும் திட்டமிட்டுள்ளனர். விரைவிலேயே என் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டாலும் ஆச்சரியமில்லை.
நான் 6 மாதங்களில் முதல்வர் பதவியை விட்டுத் தருவதாக பாஜக தலைமையிடம் கூறவே இல்லை. ஆனால், காரணமே இல்லாமல் பாஜக தலைமையை மிரட்டி என்னை முதல்வர் பதவியிலிருந்து எதியூரப்பா நீக்கினார்.
இப்போது என் மீது ஊழல் குற்றச்சாட்டை சுமத்துவதற்காக கீழ்த்தரமான வேலைகளை செய்து வருகிறார். எனக்கு மாநிலத் தலைவர் பதவி அல்லது வேறு ஒரு முக்கிய பதவியைத் தர பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. இதைத் தடுக்கவே இந்த வேலைகளில் எதியூரப்பா இறங்கியுள்ளார் என்றார் கெளடா.












Click it and Unblock the Notifications