சென்னை மெட்ரோ ரயில் கிரேன் விழுந்து ஒருவர் பலி, 6 பேர் படுகாயம்
சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் முறிந்து விழுந்து தொழிலாளி ஒருவர் பலியானார். மேலும் 6 பேர் காயம் அடைந்தனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த பணியில் வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர் பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் பச்சையப்பன் கல்லூரி அருகே பூமி்க்கு அடியில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க கிரேன் மூலம் பள்ளம் தோண்டி 75 அடி ஆழத்தில் தண்டவாளம் அமைக்கப்படுகிறது.
இந்த பணியின்போது மண் சரிந்துவிடாமல் இருக்க பாதுகாப்பு சுவர் எழுப்புகின்றனர். இந்த சுவர் கட்ட இரும்புக்கம்பிகள் கட்டப்பட்டு கான்கிரீட் போடும் பணி நடந்து கொண்டிருக்கிறது. இந்த பணியில் 3 ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரவு பகலாக நடந்து வரும் இந்த பணியில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை ஒரு குழுவினரும், இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை இன்னொரு குழுவினரும் பணியாற்றுகின்றனர்.
நேற்று காலை 8 மணிக்கு வந்தவர்கள் தங்கள் பணியை முடித்து வீடு திரும்ப 15 நிமிடங்கள் இருக்கும்போது அதாவது நேற்றிரவு 7.45 மணி அளவில் கான்கிரீட் போடும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட 60 அடி நீள ராட்சத கிரேனின் அடிப்பகுதி திடீர் என்று முறி்ந்து விழுந்தது. இந்த விபத்தில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிந்து(21) என்ற தொழிலாளர் பலியானார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்தில் பொறுப்பில் இருந்த மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இந்த விபத்தில் பலியான சிந்துவின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications