கிருஷ்ண ஜெயந்தி : நாடு முழுவதும் கோலாகல கொண்டாட்டம்

தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும் பொழுது யுகங்கள் தோறும் நான் அவதரிப்பேன் என்று பகவான் கூறியுள்ளார். மகாவிஷ்ணு தன்னுடைய 9 வது அவதாரத்தில் கிருஷ்ணராக ஆவணி மாதம் அஷ்டமி நாளில் பிறந்தார். அன்றைய தினம் ஜென்மாஷ்டமி விழாவாக நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது.
கண்ணனை எல்லோருக்கும் பிடிக்கும் அவனின் குறும்புகள், செல்ல சேட்டைகள், வீடு வீடாக சென்று வெண்ணெய் திருடிய விளையாட்டுக்கள் என சிறுவயதில் லீலைகள் அனைவரையும் ரசிக்கவைப்பவை. கண்ணனை யாரும் கடவுளாக பார்க்கவில்லை. தம்வீட்டில் பிறந்த குழந்தையாக பாவித்து ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ஆண்டுதோறும் ஆவணிமாதம் அஷ்டமி நாளில் ஜென்மாஷ்டமி கொண்டாடப்படுவது வழக்கம். ஒரு சில ஆண்டுகளில் ஆடிமாதமே ஜென்மாஷ்டமிக்கு உரிய திதி வந்து விடுவதால் அப்பொழுது கொண்டாடுகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு ஆடி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியான இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது.
வட இந்திய மாநிலங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் இரண்டு நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவில் கிருஷ்ணனில் லீலைகளை இளைஞர்களும், சிறுவர்களும் நேரிடையாக செய்து மகிழ்வார்கள். பெண்கள் தயிர் கடைவார்கள். சிறுவர்கள் வெண்ணெய் திருடுவார்கள், உரியடிப்பார்கள். வர்ணங்கள் கலந்த தண்ணீரை ஊற்றி இளம் பெண்களின் மீது பீய்ச்சுவார்கள் திருவிழாவே உற்சாகமாக இருக்கும்.
கண்ணன் பிறந்த, விளையாடிய, அரசாட்சி செய்த இடங்களில், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கூடி வழிபடுவார்கள். இன்றைய தினம் கிருஷ்ண ஜெயந்தி என்பதால்பிருந்தாவன், மதுரா, துவாரகாவில் உள்ள ஆலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
தென்னிந்தியாவில் கிருஷ்ணஜெயந்தி வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கேரளாமாநிலம் குருவாயூர் ஆலயத்தில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு செல்கின்றனர்.
தமிழ்நாட்டில் கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் கிருஷ்ணர் சிலைகளை வைத்தும் அரிசிமாவினால் பாதங்களை வரைந்தும் வீடுகளை மாவிலை தோரணங்களினால் அலங்கரித்துள்ளனர். கிருஷ்ணருக்கு பிடித்தமான சீடை, முருக்கு, தட்டை, அதிரசம் போன்றவைகளை வைத்து கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு ராதா கிருஷ்ணரை போல வேடமிட்டு அலங்கரித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
பள்ளிகளில் கிருஷ்ணர் படங்களை வைத்து வழிபாடு செய்யப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு லட்டுகளை வழங்கினர். மாணவர் பலர் ராதா, கிருஷ்ணர் வேடமணிந்து வந்து விளையாட்டுக்களில் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications