அரசியல் சுயலாபத்திற்காக நடத்தப்படும் டெசோ மாநாட்டை புறக்கணிக்க சீமான் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

Seeman
சென்னை: அரசியல் சுயலாபத்திற்காக திமுக நடத்தும் டெசோ மாநாட்டை அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழர்கள் முழு அரசியல் உரிமையுடனும், இறைமையுடனும், பாதுகாப்புடன் வாழ ஒரே வழி தனித் தமிழீழமே என்கிற இலக்கை எட்ட தங்கள் இன்னுயிரை தந்த போராளிகளின் ஈகையை அவமதிக்கும் செயலே டெசோ என்ற பெயரில் திமுக தலைவர் மு. கருணாநிதி கூட்டும் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடாகும்.

ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதம் என்று சித்தரித்து, அதனை ஒழிக்கும் போர் என்று கூறி, நமது சொந்தங்கள் ஒன்றே முக்கால் லட்சம் பேரை சிங்கள பெளத்த பேரினவாத அரசு கொன்று குவித்தது. விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம், போர் முடிந்துவிட்டது என்று 2009ம் ஆண்டு மே 19ம் தேதி அறிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே. ஆனால் போர் முடிந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், போரினால் இடம் பெயர்ந்து சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாகவுள்ள மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் இதுவரை குடியமர்த்தவில்லை. மாறாக, தமிழர் வாழந்த பூமியில் 30 விழுக்காட்டிற்கு மேல் சிங்கள இராணுவத்தின் ஆக்கிரமிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் இருந்து பல்லாயிரக்கணக்கில் சிங்களவர்கள் தமிழர் பகுதிகளில் குடியேற்றப்பட்டுள்ளனர். அவர்களின் தமிழர்களின் விளை நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இப்படி தமிழீழமே சிங்கள காலனியாக மாற்றப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி போர் முடிந்த பின்னரும் தமிழர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை பல்வேறு வகைகளில் இனவெறி ராஜபக்சே அரசு மேற்கொண்டு வருகிறது. இதனை பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் ஆதாரங்களுடன் வெளியிட்டன. இலங்கை அரசே அமைத்த கற்ற பாடங்களும் இணக்கப்பாடும் என்கிற ஆணையம் கூட, மறுகுடியமர்த்தலும், மறுசீரமைப்புப் பணிகளும் நடைபெறவில்லை என்று குறை கூறியிருந்தது. இதைப் பற்றியெல்லாம் இந்த 3 ஆண்டுக்காலத்தில் வாய் திறக்காத திமுக தலைவர் கருணாநிதி, டெசோ அமைப்பிற்கு மீண்டும் உயிரூட்டி, தமிழீழ விடுதலைக்கு தனது உயிர், பொருள், ஆவி அனைத்தையும் அளிப்பேன் என்றும், தான் மரணிப்பதற்கு முன்னர் தமிழீழம் மலர்வதை பார்க்க விரும்புவதாகவும் கூறினார். ஆனால் மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் சந்தித்துப் பேசிய பிறகு, ஈழ விடுதலை தொடர்பான தீர்மானம் டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்படாது என்று அறிவித்தார். இப்போது இந்த மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது அல்ல என்று கூறியுள்ளார்.

ஈழத்தில் வாழும் நமது சொந்தங்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதற்கும், இன்று வரை இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருவதற்கும் இலங்கை அரசு காரணமில்லையா? இன்றைக்கு நீங்கள் ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு என்று நடத்துகிறீர்களே, அப்படியானால், ஈழத் தமிழர்களின் வாழ்விற்கு அந்நாட்டில் பாதுகாப்பு இல்லை என்பது தானே பொருள்? அதற்குக் காரணம் இலங்கை அரசும், அதன் இனவெறி இராணுவமும் தானே? உண்மை இவ்வளவு தெளிவாக இருக்க, டெசோ மாநாடு இலங்கை அரசுக்கு எதிரானது இல்லை என்று சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இலங்கை அரசுக்கு எதிரானது இல்லையென்றால் அதற்கு ஆதரவான மாநாட்டைத்தான் டெசோவின் பெயரால் திமுக நடத்துகிறதா?

தமிழினத்தை திட்டுமிட்டு அழித்தொழித்த ராஜபக்சேவுக்கு என்றைக்காவது திமுக நெருக்கடி கொடுத்துள்ளதா? அப்படி நெருக்கடி கொடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி கூட்டமோ மாநாடோ நடத்தியுள்ளதா திமுக? போர் முடிந்த பிறகு வன்னி முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்களின் நிலையறிய சென்ற மக்களவை திமுக, காங்கிரஸ் உறுப்பினர்களைக் கொண்டக் குழு, மகிந்தா ராஜபக்சேவை சந்தித்து விருந்துண்டு, அவர் அளித்த பரிசை கனிமொழி உள்ளிட்ட உறுப்பினர்கள் பெற்றுக்கொண்டு வந்ததைத் தவிர, வேறு எதைச் சாதித்தது திமுக? இப்படி தமிழின எதிரி ராஜபக்சேவுக்கு இணக்கமான அரசியலை நடத்திவிட்டு, இப்போது ஈழத் தமிழர்கள் வாழ்வுரிமை மாநாடு என்று நடத்துவதன் நோக்கம் சுயலாப அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன?

இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை பற்றியும், வாழ்வுரிமை பற்றியும் பேசும் திமுக தலைவர், தமிழ்நாட்டில் அவரது ஆட்சியில் சிறப்பு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட தனிமைச் சிறைகளில் ஈழத் தமிழர்களை ஐயத்தின் பேரால் பிடித்து, தனிமைச் சிறையில் போட்டு தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு வதைத்து வருகிறது. தங்களை விடுதலை செய்து மற்ற முகாம்களில் வாழும் தங்கள் சொந்தங்களுடன் வாழ அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் பலமுறை பட்டினிப் போராட்டம் நடத்தி வந்துள்ளார்கள். இப்போது கூட பூந்தமல்லி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஒரு ஈழத் தமிழர் கடந்த 5ம் தேதி முதல் பட்டினிப் போராட்டம் நடத்தி வருகிறார். இதற்கெல்லாம் கருணாநிதி அவர்களின் பதிலென்ன? அவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஏன் அரசுக்கு கோரிக்கை விடுக்கவில்லை? கண் முன்னால் சிறைப்படுத்தப்பட்டுள்ள ஈழத் தமிழ் சொந்தங்களுக்கு ஆதரவு கரம் நீட்டாமல், ஈழ மண்ணில் வாடும் சொந்தங்கள் பற்றி சென்னையில் மாநாடு நடத்துவது வினோதமாக இல்லையா?

எனவே, திமுக தலைவர் நடத்தும் இந்த டெசோ மாநாடு ஈழத் தமிழரின் விடுதலையையோ அல்லது அவர்களின் நல்வாழ்விற்காகவோ நடத்தப்படவில்லை, அது முழுக்க முழுக்க திமுகவின் அரசியல் செல்வாக்கை மீண்டும் தூக்கி நிறுத்தும் உள்நோக்கம் கொண்ட தமிழினத் துரோக முயற்சியாகும். இதில் ஈழத்தில் இருந்து எவர் கலந்து கொண்டாலும் அது தமிழினத்திற்குச் செய்யும் துரோகமாகவும், கருணாநிதி அவர்களின் சுயநல அரசியலுக்கு துணை போவதாகவுமே அமையும் என்பதை நாம் தமிழர் கட்சி சுட்டிக் காட்டுகிறது.

சிங்கள பெளத்த இனவாத அரசின் கொடுங்கோன்மையிலிருந்து விடுதலைப் பெற்று தமிழீழ தனி அரசை ஏற்படுத்துவது ஒன்றே இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்விற்கு ஒரே வழி என்பதையும், அந்த இலக்கை நிராகரித்துவிட்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் தமிழீழ மக்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வராது என்பதையும் தமிழினத்தவர் அனைவரும் புரிந்துகொண்டு, டெசோ மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+