நில அபகரிப்பு: கூடுதல் டிஜிபி துக்கையாண்டியின் தம்பி வீட்டில் போலீஸ் ரெய்ட்!
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்த ஏ.டி.ஜி.பி. துக்கையாண்டியின் மனைவி மற்றும் மகள் மீதான நில அபகரிப்பு புகாரால் ஓய்வு பெறும் நாளில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் சென்னையை விட்டு வெளியேறவும் துக்கையாண்டிக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி மற்றும் மகள்கள் இருவர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் தங்களை கைது செய்யாமல் இருக்க இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரியுள்ளனர்.
இந்நிலையில் நீலாங்கரைஅருகே உள்ள பனையூர் " சீ ஷோர் டவுனில்" துக்கையாண்டி வீடு உள்ளது. போலீசார் அங்கு சென்ற போது, வீடு பூட்டிக்கிடந்தது. இதனால் அங்கு சோதனை நடத்த முடியாமல் போலீசார் ஏமாற்றம் அடைந்தனர்.
துக்கையாண்டியின் தம்பி நாராயணசாமி பக்கத்து தெருவில் வசிக்கிறார். அவரது வீட்டில் தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர். அங்கு நடந்த சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர். நாராயணசாமி சென்னை ஆயுதப்படை போலீசில் இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.
அவரது மனைவி பாலசரஸ்வதி, துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமியின் தங்கை ஆவார். சோதனை போட்டபோது, நாராயணசாமியும், பாலசரஸ்வதியும் வீட்டில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
புகார் என்ன?
மும்பை துறைமுகம் தலாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரகுமாருக்கு சொந்தமான சென்னை பனையூரில் 12 ஆயிரம் சதுர அடி நிலத்தை மோசடியாக அபகரித்தது, மும்பையைச் சேர்ந்த மோதிலால் கரன்தாஸ் தலால், அவரது மனைவி ஆகியோருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்தது, தில்லியைச் சேர்ந்த சீமா சந்தீப்புக்குச் சொந்தமாக பனையூரில் இருந்த 2 கிரவுண்ட் நிலத்தையும் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து விற்றது ஆகியவை துக்கையாண்டி மனைவி மற்றும் மகள்கள் மீதான புகாராகும்.