தோழிகளுடன் அரட்டை: வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பள்ளி மாணவி தீக்குளித்து சாவு
தூத்துக்குடி: பள்ளி முடிந்த பிறகு வீட்டுக்கு வராமல் தோழிகளுடன் அரட்டை அடித்ததால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்ட பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தொண்டைமான் தெருவைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். கட்டிட தொழிலாளி. அவரது மனைவி கனகலெட்சுமி. அவர் அங்குள்ள பீடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள். இதில் மூத்த மகள் சந்தோஷினி அதே ஊரில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
சந்தோஷினி பள்ளி முடிந்ததும் நேராக வீட்டுக்கு வராமல் தனது தோழிகளுடன் பேசிக் கொண்டிருப்பார். இதனால் வீட்டிற்கு அடிக்கடி தாமதமாக வந்துள்ளார். இது பிடிக்காத கனகலெட்சுமி அவரைக் கண்டித்துள்ளார். இருப்பினும் சந்தோஷினி தனது தோழிகளுடன் பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதனால் கோபம் அடைந்த கனகலெட்சுமி மகளை பள்ளி்க்கு அனுப்புவதை நிறுத்தினார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி முத்துகிருஷ்ணன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். மற்ற குழந்தைகள் பள்ளி்க்கு சென்றுவிட்டனர். அதன் பிறகு சந்தோஷினியை வீட்டில் வைத்து பூட்டிவிட்டு கனகலெட்சுமி பீடி கம்பெனி்க்கு சென்றுவிட்டார். காலை 11 மணி அளவில் அவர்கள் வீட்டிலிருந்து புகை வருவதைப் பார்த்த பக்கத்து வீட்டிலிருந்த எஸ்தர் என்பவர் பீடி கம்பெனிக்கு சென்று கனகலெட்சுமியிடம் விபரத்தை தெரிவித்தார். உடனே அவர் பதறி அடித்து கொண்டு வீட்டிற்கு ஓடி வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டியிருந்ததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு சந்தோஷினி உடல் கருகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை தூத்துக்கடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் தாய் தன்னை வீட்டிற்குள் சிறை வைத்ததால் மனமுடைந்த சந்தோஷினி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தது தெரிய வந்தது.