சம்பா சாகுபடியைத் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சென்னை: மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடும் தேதியை தமிழக அரசு உடனே அறிவித்துவிட்டு சம்பா சாகுபடியைத் துவங்கத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு போதிய தண்ணீர் இல்லாததால் மேட்டூர் அணை குறித்த காலத்தில் திறக்கபடவில்லை. இதனால் பெரும்பாலான பகுதிகளில் குறுவை சாகுபடி செய்யப்படவில்லை.
ஆடி மாதம் தொடங்கியும் மேட்டூர் அணை திறக்கபடுவதற்கான அறிகுறிகள் தென்படாததால் இந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பொய்த்துவிடுமோ என்ற கவலையில் தமிழக விவசாயிகள் ஆழ்ந்திருந்தனர். இந்த நேரத்தில் இயற்கையின் கொடையால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கர்நாடகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் நிரம்பத் தொடங்கியுள்ளன.
கர்நாடக அரசும் அதன் தேவைக்கு போக நிரம்பி வழியும் உபரி நீரை மட்டும் தமிழகத்திற்கு திறந்து விட்டிருக்கிறது. கபினி அணையில் இந்து கடந்த 3 நாட்களாக வினாடிக்கு 12,000 கன அடி என்ற அளவில் தண்ணீர் திறக்கப்படுவதால் அந்த நீர் இன்று இரவுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்தும் விரைவில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படும் என்றும், இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அடுத்த ஒரு வாரத்தில் 90 அடி என்ற அளவை தாண்டும் என்றும கூறப்படுகிறது. கர்நாடகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரைக் கொண்டும், மேட்டூர் அணையில் ஏற்கனவே உள்ள தண்ணீரை கொண்டும் சம்பா சாகுபடியை சிக்கலின்றி மேற்கொள்ள முடியும் என நீர்வளத்துறை வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பா சாகுபடிக்கு தேவையான பணிகளை காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் தொடங்குவதற்கு வசதியாக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதியை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும் சம்பா சாகுபடிக்கு தேவையான விதைநெல், நுண்ணூட்டச்சத்து உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் அடங்கிய பையை விவசாயிகளுக்கு அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
குறுவை சாகுபடி பொய்த்து போனதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அவர்களது பழைய பயிர்கடனை தள்ளுபடி செய்துவிட்டு, புதிதாக பயிர்க்கடன் வழங்கவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் மானிய விலையில், தட்டுப்பாடின்றி உரங்களை வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications