தொடங்கியது டெசோ மாநாடு .. தமிழக அரசு மீது ஸ்டாலின் கடும் தாக்கு!

சென்னை ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாநாடு நடத்த தமிழக காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் போராடி திமுக அனுமதி பெற்றது. இதைத் தொடர்ந்து இன்று மாலை 4.30 மணியளவில் டெசோ மாநாடு திட்டமிட்டபடி ஒய்.எம்.சி.ஏ. திடலில் தொடங்கியது.
முதல் நிகழ்ச்சியாக திமுக தலைவர் கருணாநிதி, கவிஞர்கள் வைரமுத்து, கவிதைப் பித்தன், நெல்லை ஜயந்தா உள்ளிட்ட பலர் எழுதிய ஈழத் தமிழர் நிலை பற்றிய பாடல்கள் பாடப்பெற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் போன தமிழக அரசு
பின்னர் திமுக பொருளாளரும் டெசோ மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவருமான மு.க. ஸ்டாலின் வரவேற்புரையாற்றினார். தமது வரவேற்புரையில் பேசியதாவது:
மாநாடு நடத்தக் கூடாது என்று நினைத்தோரின் முகத்தில் கரியை பூசும் வகையில் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாநாடு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையும் பொறுத்துக் கொள்ளாத அதிமுக அரசு, மாநாட்டுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையிட முயன்றது. ஆனால் இன்றே இந்த வழக்கை எடுத்துக் கொள்ள முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தட்டிக் கழிக்கப்பட்டுவிட்டது.
ஈழத் தமிழர்களின் இன்றைய நிலைமைக்கு காரணம் வரலாறு அவர்களை வஞ்சித்துவிட்டது. யாழ்ப்பாணமும், அனுராதபுரமும், வன்னியும் கண்டியும் 2500 ஆண்டுகால இலங்கையின் வரலாற்று சாட்சிகள்.
இலங்கையில் இரண்டு முக்கிய தேசிய இனங்களாக சிங்களவரும் தமிழர்களும் இருக்கின்றனர். இலங்கையின் ஒன்றரை கோடி மக்கள் தொகையில் 35 லட்சம் பேர் தமிழர்கள். 15-ம் நூற்றாண்டு முதல் 1948 ஆம் ஆண்டுவரை போர்ச்சுகீசியர், டச்சுக்காரர் மற்றும் வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பில் இலங்கை இருந்து வந்தது. வெள்ளையர்கள் இலங்கையைவிட்டு வெளியேறிய போது இலங்கையில் தமிழ் மக்களின் சுதந்திரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. தமிழர் தம் பாரம்பரிய பிரதேசங்களை இழந்தனர். தமிழருக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு சரித்திரம் தலைகுனிந்து வருகிறது.
ஏற்க முடியாது
ஒரு நாட்டில் ஒரே கொடி, ஒரே அரசியல் சாசனம் என்றால் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்றும் ஆள்வதற்கு நாங்கள். மாள்வதற்கு தமிழர்கள் என்று சிங்களவர்கள் சொல்வதை நம்மால் ஏற்க முடியாது.
சிங்கள ஆட்சியாளருக்கு எதிராக குரல் கொடுத்த முதல் தலைவர் தந்தை செல்வா. 1952-ம் ஆண்டு இலங்கையில் தமிழர் வாழும் பகுதியில் செல்வா போட்டியிட்டார். அவரை எதிர்த்து நடேசன் பிள்ளை போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் தந்தை செல்வா தோற்கடிக்கப்பட்டார். தந்தை செல்வா தேர்தலில் தோற்ற பின்னரும் கூட தமிழின உரிமைகளுக்காக பாடுபடுவதில் போராடிக் கொண்டிருந்தார். அவரைப் போலவே கருணாநிதியும் தேர்தல் வெற்றி தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் கருணாநிதி போராடிக் கொண்டிருக்கிறார்.
1983 முதல் 2002 வரையிலான 3 ஈழப் போர்களும் 2005 முதல் 2009-ம் ஆண்டு வரை 4-ம் ஈழப்போரும் நடைபெற்றது. இதில் எப்படியெல்லாம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர், இடம்பெயர்ந்தனர், இனப்படுகொலைக்குள்ளாயினர் என்பதை அமெரிக்க நாட்டின் வெளியுறவு அமைச்சகம் விரிவாக பட்டியலிட்டிருக்கிறது என்றார் அவர்.
யார் யார் பங்கேற்பு?
இந்நிகழ்ச்சியில் லோக் ஜனசக்தியின் தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், தேசிய மாநாட்டு கட்சி எம்.பி ஷாரிக், தேசியவாத காங்கிரஸ் கோவிந்தராம், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், நைஜீரியா எம்.பி அப்துல் ரசாக், சுவீடன் எம்.பி. நசீம் மாலிக்,மலேசிய எம்.பி. யூசுப், மொரக்காவோ மனித உரிமை செயற்பாட்டாளர் முபாரக், இலங்கை நவசமாஜ கட்சி விக்கிரமபாகு, ஆம்னெஷ்டி அமைப்பின் இயக்குநர் ஆனந்த் குருசாமி. லண்டன் குகநேசன், சிவானந்த சோதி.சிங்கப்பூர் நரசிம்மன், மலேசியா தமிழ்மணி ஆகியோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications