அடுத்தவர் படைப்பை திருடி கட்டுரை எழுதிய இந்திய பத்திரிகையாளர் ஜக்காரியா சஸ்பெண்ட்!
நியூயார்க்: அடுத்தவர் படைப்பில் இருந்து திருடி தமது சொந்த கட்டுரை போல் எழுதியதற்காக டைம் பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளரான இந்தியாவைச் சேர்ந்த பரீத் ஜக்காரியா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டைம் பத்திரிகையில் பணியாற்றும் ஊடகவியலாளர் ஜக்காரியா, சி.என்.என். தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். டைம் பத்திரிகையில் ஜக்காரியா எழுதிய கட்டுரை ஒன்றில் இடம்பெற்றிருந்த சில பத்திகள், அதாவது ஒரு பாராகிராப், அமெரிக்காவின் மற்றொரு பத்திரிகையான நியூயார்க்கெரில் ஏப்ரல் 23-ல் ஜில் லிபோர்ஸ் என்பவரது கட்டுரையில் இடம்பெற்றிருந்தவை என்ற புகார் எழுந்தது.
இதை ஒப்புக் கொண்ட ஜக்காரியா, இதற்காக தாம் பகிரங்கமாக மன்னிப்பு கோருவதாகவும் முழுவதும் தம்முடைய தவறுதான் என்றும் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டைம் பத்திரிகையின் செய்தித் தொடர்பாளர் அலி ஜெல்னகோ, ஜக்காரியாவின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டாலும் அவர் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலை உள்ளது. அவரை ஒரு மாத காலம் சஸ்பெண்ட் செய்கிறோம் என்றார்.
இதனையடுத்து சி.என்.என். நிர்வாகமும் ஜக்காரியாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது. ஆனால் எத்தனை மாதத்துக்கு சஸ்பெண்ட் என சி.என்.என். நிர்வாகம் தெரிவிக்கவில்லை.
இந்தியாவில் பிறந்தவரான ஜக்காரியா, யேல் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக் கழகங்களில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications