சென்னையில் நேற்றும் திரண்ட வட கிழக்கு மாநிலத்தவர்-1000 பேர் சொந்த மாநிலம் திரும்பினர்
சென்னை: சென்னையில் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் ஏராளமான அஸ்ஸாமியர்கள் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவர்கள் திரண்டனர். அனைவரும் ரயிலில் சொந்த மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர்.
வட கிழக்கு மாநிலத்தவர்களுக்கு ஆபத்து வரப் போவதாக பீதி கிளப்பப்பட்டதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் அஸ்ஸாமியர்கள் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவர்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பி வருகின்றனர்.
சென்னையிலும் கடந்த 3 நாட்களாக அஸ்ஸாமியர்கள் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலத்தவர்கள் சாரை சாரையாக சொந்த மாநிலங்களுக்குப் போய்க் கொண்டுள்ளனர். இதுவரை பல ஆயிரம் பேர் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், இன்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் குவிந்தனர். அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். திருவனந்தபுரத்திலிருந்து வந்த சாலிமார் எக்ஸ்பிரஸ் ரயிலில் கூடுதல் பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு அவற்றில் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.