ரஷ்ய மசூதியில் சரமாரி துப்பாக்கிச் சூடு - 8 பேர் காயம்
மாஸ்கோ: ரஷ்யாவின் டாஜெஸ்தான் பகுதியில் உள்ள ஒரு மசூதிக்குள் புகுந்த முகமூடி அணிந்த நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் காயமடைந்தனர். மேலும் ஒரு குண்டுவெடிப்பும் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
டாஜெஸ்தான் பகுதி, வன்முறைக் களமாகும். இந்த வன்முறை குறித்து ரஷ்ய உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், கசவ்யுர்ட் என்றநகரில் இந்த சம்பவம் நடந்தது. துப்பாக்கிச் சூடு நடந்த மசூதி ஷியா பிரிவினரின் மசூதியாகும். ரமலான் நோன்புக் காலம் முடிவடைந்து,முஸ்லீம்கள் ரம்ஜானைக் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 2 பேர் துப்பாக்கியால் சுட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
காயமடைந்தவர்களில் 3 பேருக்கு நெஞ்சு மற்றும் வயிற்றில் தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. மற்றவர்களுக்கு கால், கைகளில் குண்டு பாய்ந்தது.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்த மசூதியில் ஒரு குண்டும் வெடித்துள்ளது. அதிலும் பலர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த பகுதியில் முஸ்லீம்கள் அதிகம் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் டாஜெஸ்தானில் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் சகஜமானதாகும். இங்கு கிட்டத்தட்ட தினசரி குண்டுவெடிப்புகளும், துப்பாக்கிச் சூடும் சகஜமாகி விட்டன. செச்னியாவைச் சேர்ந்த தீவிரவாதிகளுடன் தொடர்புடையவர்கள்தான் இந்த வன்முறையில் ஈடுபடுவதாக ரஷ்ய அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளில் அரசுப் படையினருடன் செச்னியர்கள் 2 பெரிய போர்களை நடத்தியுள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications