ஆவணியில் 2 அமாவாசை.. திருமணமான ஆண்களுக்கு கேடு: மரங்களுக்கு தாலி கட்டிய பெண்கள்!!
தாராபுரம்: ஆவணி மாதத்தில் 2 அமாவாசை வருவதால் திருமணமான ஆண்களுக்கு ஆபத்து என்ற தகவல் தாராபுரத்தில் காட்டுத்தீ போன்று பரவியது. இதையடுத்து பெண்கள் அரச மரம் மற்றும் வேப்ப மரத்தில் தாலி கட்டி விநாயகரை வழிபட்டனர்.
தமிழ் மாதமான ஆவணியில் 2 அமாவாசை வருகிறது. அதிலும் ஒரு அமாவாசை வெள்ளிக்கிழமை வந்தது. இந்நிலையில் ஆவணியில் 2 அமாவாசை வருவதால் திருமணமான ஆண்களுக்கு ஆபத்து என்ற செய்தி தாராபுரம் பகுதியில் காட்டுத்தீ போன்று பரவியது. திருமணமான ஆண்கள் ஆபத்து நீங்கி, நீண்ட ஆயுள் பெற அரசமரத்தடி விநாயகரை வழிபட வேண்டும் என்று கூறப்பட்டது.
இதையடுத்து அப்பகுதி நடுபஜனை மடத்தெருவில் உள்ள அரசமரம் மற்றும் வேப்ப மரங்களின் கீழ் அமர்ந்திருக்கும் ஸ்ரீ சித்தி விநாயகரை பெண்கள் வழிபட்டனர். மேலும் அவர்கள் அங்குள்ள அரச மரம் மற்றும் வேப்ப மரத்தில் தாலி கட்டினர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் கூறுகையில்,
ஆவணி மாதத்தில் 2 அமாவாசை வந்தால் அது ஆண்களுக்கு கேடாகும். அதிலும் ஆவணி 1ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அமாவாசை வந்ததால் பயங்கர விளைவுகள் ஏற்படும். மேலும் ஆவணி 30ம் தேதியும் அமாவாசை வருகிறது. அதனால் தான் கேடுகளில் இருந்து காக்க வேண்டி விநாயகர் அமர்ந்திருக்கும் அரச மரம் மற்றும் வேப்பமரத்தில் தாலி கட்டி வழிபடுகிறோம் என்றார்.