நான் ஏன் திருமணம் செய்யவில்லை? தொல்.திருமாவளவன் விளக்கம்

கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள், தொழிலாளர்கள் சார்பில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் 50வது பிறந்தநாள் விழா கோயம்பேட்டில் நடந்தது.
இந்த விழாவில் பேராயர் எஸ்றா சற்குணம், கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மேம்பாட்டு சங்க தலைவர் ராஜசேகர், திமுக முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். விழாவில் திருமாவளவனிடம் 519 கிராம் பொற்காசுகள் வழங்கப்பட்டது.
அப்போது தொல்.திருமாவளவன் எம்.பி. பேசியதாவது,
நான் கல்லூரியில் படித்தபோது கொத்தவால்சாவடியில் மூட்டை தூக்கினேன். படித்து முடித்த பிறகு அங்குள்ள கடையில் மாதம் ரூ.200 சம்பளத்துக்கு கணக்குப் பிள்ளையாக வேலை செய்தேன்.
தொழிலாளர்கள் நிலையை நன்கு உணர்ந்ததால் தான் இங்கு நடக்கும் விழாவில் பங்கேற்க ஒப்புக் கொண்டேன். எனக்கு 519 கிராம் பொற்காசுகள் வழங்கி இருக்கிறீர்கள். இந்தக் காசுகள் எனது குடும்பத்துக்குச் செல்லாது. சிறுத்தைகள் இயக்கத்துக்குத் தான் செல்லும்.
ஒவ்வொரு கட்சியும் தங்களுக்கு டி.வி. சேனல், பத்திரிக்கை வைத்துள்ளன. அது போல நமக்கும் உருவாக்க வேண்டாமா? அதற்காகத் தான் உங்களிடம் கையேந்தி வந்து இருக்கிறேன்.
கல்லூரி காலத்தில் சக மாணவர்கள் காதலியுடன் கடற்கரையில் சுற்றித் திரிவார்கள். நான் அப்போது கூட ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றித் தான் சிந்தித்தேன். அதனால் தான் திருமணம் செய்ய விரும்பவில்லை. மற்றபடி நான் யாரையும் காதலித்தது இல்லை. காதல் தோல்வி அடையவும் இல்லை. என் உடலில் எந்தக் குறைபாடும் இல்லை.
சென்னை நகரில் எனது 200 பேனர்களைப் போலீசார் அகற்றி உள்ளனர். ஜெயலலிதா அந்த வழியாகச் செல்வார் என்பதால் அவை அகற்றப்பட்டது. என் முகத்தை ஜெயலலிதா பார்த்தது இல்லையா? என்னுடன் கைகுலுக்கவில்லையா? எங்களுக்குச் சீட் வழங்குவதில் மட்டும் அதிமுக, திமுக நட்பாக இருப்பது போலத் தெரிகிறது. அந்த இரு கட்சிகளும் எங்களுக்கு அதிக சீட் தருவதில்லை என்றார்.












Click it and Unblock the Notifications