ஜார்க்கண்டில் ஒரு என்.டி. திவாரி... அமைச்சர் மீது ஆசிரியை பாலியல் புகார்!
ராஞ்சி: முன்னாள் முதல்வர் என்.டி.திவாரி சட்டவிரோதமாக பிள்ளையைக் கொடுத்ததாக புகார் எழுந்ததைப் போல இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு அமைச்சர் மீது புகார் கிளம்பியுள்ளது.
என்.டி.திவாரி தனது தந்தை, தனது தாயுடன் சட்டவிரோதமாக உறவு கொண்டு தன்னைப் பெற்றதாக ரோஹித் என்பவர் வழக்குத் தொடர்ந்து, அதில் தனது புகாரை நிரூபிக்கவும் செய்தார்.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநில வேளாண்மைத் துறை அமைச்சர் சத்யானந்த் தன்னுடன் ரகசிய உறவு வைத்து தனக்கு குழந்தையைக் கொடுத்து விட்டதாக ஒரு ஆசிரியை புகார் கூறியுள்ளார்.
சத்யானந்த்தின் ஜம்தரா தொகுதியை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை சோனியா தேவி. இவர், சத்யானந்த் தன்னை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கடந்த ஆண்டே புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் இதை சத்யானந்த் மறுத்தார்.
இந்த நிலையில் தனக்கும், சத்யானந்த்துக்கும் இடையிலான ரகசிய உறவில் குழந்தை ஒன்றும் பிறந்ததாக கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் சோனியா தேவி.
இதுகுறித்து அவர் கூறுகையில், 1996ம் ஆண்டே என்னை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார் சத்யானந்த். எங்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
எனக்கும் என் மகனுக்கும் சட்டரீதியான உரிமையும், சமுதாய அங்கீகாரமும் வழங்கப்பட வேண்டும். என் மகனுக்கு அமைச்சர் சத்யானந்த்தான் தான் தந்தை என்று நிரூபிக்கும் வகையில் அவரை மரபுபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் இதை சத்யானந்த் மறுபடியும் மறுத்துள்ளார். இப்படிக் கூறுபவர் ஏன் இத்தனை காலம் அமைதி காத்தார். அவர் கூறுகிறார் என்பதற்காகவெல்லாம் நான் டிஎன்ஏ சோதனைக்கு ஒத்துக் கொள்ள முடியாது என்று காட்டமாக கூறியுள்ளார்.
ஆனால் திடீர் திருப்பமாக இன்னொரு நபர் கிளம்பி வந்துள்ளார். அவர் சோனியா தேவி எனது மனைவி, அவரது மகன் எனக்குப் பிறந்தவர் என்று கூறியுள்ளார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அத்தனை பேரும் சிண்டைப் பிடித்துக் கொள்ளாத குறையாக குழப்பமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications