காவிரி: பரிதாபத்துக்குரியதாய் மாறிவிட்ட தமிழக உழவர்களின் நிலை-ராமதாஸ்
சென்னை: காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தை மத்திய அரசு உடனடியாகக் கூட்ட வேண்டும். அவ்வாறு ஆணையம் கூட்டப்படும் வரை காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 2 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடகத்திற்கு பிரதமர் ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று போற்றப்படும் காவிரிப் பாசன மாவட்டங்கள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு பாசனம் செய்ய தண்ணீர் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கண்ணீர் வெள்ளமாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக இருந்த நிலையில், கர்நாடக அரசு அம்மாநில அணைகளில் இருந்த தண்ணீரில் ஓரளவை கொடுத்திருந்தால் கூட காவிரிப் பாசன பகுதிகளில் குறுவை சாகுபடியை வெற்றிகரமாக செய்திருக்க முடியும்.
ஆனால், கர்நாடகம் தண்ணீர் தர மறுத்துவிட்டதால், மூன்றில் இரண்டு பங்கு பரப்பளவில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுவிட்டது. ஆகஸ்ட் மாதத்தில் சம்பா சாகுபடி தொடங்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில், மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததால், அதற்கான அடிப்படை பணிகள் கூட இன்னும் தொடங்கப்படவில்லை.
கர்நாடக அணைகளில் இருந்து மேட்டூர் அணைக்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டால் தான் சம்பா சாகுபடி சாத்தியமாகும். காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி கர்நாடகம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இன்று வரை 100.65 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்திற்கு தந்திருக்க வேண்டும். இடர்ப்பாட்டுக் கால நீர்ப்பகிர்வு முறைப்படி பார்த்தால்கூட 35 டி.எம்.சி தண்ணீரைக் கொடுத்திருக்க வேண்டும்.
ஆனால், கர்நாடகம் இதுவரை வெறும் 7 டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே தந்திருக்கிறது. கர்நாடக அணைகள் அனைத்தும் தற்போது நிரம்பியுள்ள போதிலும், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க அம்மாநில அரசு மறுத்து வருகிறது. இப்பிரச்சனை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தை கூட்டும்படி, அதன் தலைவரும், பிரதமருமான மன்மோகன் சிங்கிற்கு கடந்த மே 19ம் தேதியே தமிழக முதல்வர் கடிதம் எழுதியும் அதை பிரதமர் பொருட்படுத்தவில்லை.
காவிரிப் பிரச்சனை தொடர்பான வழக்கு கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, காவிரி ஆணையத்தை கூட்டாததற்காக மத்திய அரசுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அதன்பிறகும் மத்திய அரசின் உறக்கம் கலையவில்லை. காவிரிப் பிரச்சனையில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இவ்வாறு அக்கறையின்றி இருப்பது கடுமையாக கண்டிக்கதக்கது.
தமிழக உழவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ள நிலையில், இனியாவது மத்திய அரசு அதன் அலட்சியத்தை கைவிட்டு, காவிரிப் பிரச்சனை குறித்து விவாதிக்க காவிரி ஆணையத்தை உடனடியாக கூட்டவேண்டும். அவ்வாறு ஆணையம் கூட்டப்படும் வரை காவிரியில் தமிழகத்திற்கு தினமும் 2 டி.எம்.சி வீதம் தண்ணீர் திறந்து விடும் படி கர்நாடகத்திற்கு பிரதமர் ஆணையிட வேண்டும்.
காவிரி பிரச்சனை குறித்து முறையிடுவதற்கான இன்னொரு அமைப்பான காவிரி நடுவர் மன்றம் கடந்த 5 மாதங்களாக தலைவர் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது. அதற்கும் புதிய தலைவரை உடனடியாக நியமிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications