நகையை திருடிவிட்டு புதரில் பதுங்கிய கொள்ளையரை தீ வைத்து பிடித்த பொதுமக்கள்
தஞ்சாவூர்: தஞ்சை அருகே ஆசிரியையிடம் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிய கொள்ளையர்கள் இருவரை கிராம மக்கள் சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கடம்பக்குடி அரசு பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வரும் அமுதவல்லியும் மற்றொரு ஆசிரியையான லூர்து மேரியும் பள்ளிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஆசிரியைகளின் வாகனம் மீது மோதி கீழே தள்ளியுள்ளனர். அப்போது அமுதவல்லியின் கழுத்தில் இருந்த ஆறரை பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு இருவரும் மின்னல் வேகத்தில் மறைந்தனர்.
நகையை பறித்துக் கொண்டு ஓடியதைக் கண்டு இருவரும் கூச்சல் போட்டுள்ளனர். இதையடுத்து அங்கு கூடிய கிராம மக்கள் அருகே உள்ள கிராமங்களுக்கும் தகவல் கொடுத்தனர். இதனால் உஷாரான பக்கத்து கிராம மக்கள் கொள்ளையர்களை வழிமறிக்க காத்திருந்தனர். பொதுமக்கள் சுற்றி வளைத்து நிற்பதை தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு அருகில் உள்ள புதருக்குள் மறைந்தனர். ஆனாலும் கிராம மக்கள் விடுவதாக இல்லை. புதருக்கு தீ வைத்துவிட்டனர். இதனால் அலறியடித்துக் கொண்டு கொள்ளையர்கள் இருவரும் வெளியே வந்தனர். அப்போது தங்கள் கையில் இருந்த அரிவாளால் பொதுமக்களை கொள்ளையர்களில் ஒருவன் தாக்கத் தொடங்கினான். பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்து அரிவாளால் திருப்பித் தாக்கினர். இருவரும் வசமாக சிக்கிக் கொள்ள தர்ம அடி கொடுக்கப்பட்டது. பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொள்ளையர் இருவரையும் கைது செய்தனர். கொள்ளையன் தாக்கியதில் படுகாயமடைந்த பாஸ்கர் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொள்ளையர்களில் ஒருவன் திருச்சி பாலக்கரையை சேர்ந்த மாரிமுத்து, மற்றொருவன் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications