அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சிக்குகிறார் ராம்தேவ் உதவியாளர் பாலகிருஷ்ணன்
டெல்லி: பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணன் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
கருப்பு பண விவகாரம் குறித்து போராட்டம் நடத்தி வரும் பாபா ராம்தேவ் நடத்தி வரும் நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரது நிறுவனங்களில் வருமான வரி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
யோக ஷிவ்ரிஸ் என்னும் நிறுவனத்தில் ரூபாய் ஐந்து கோடி அளவில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. பதஞ்சலி யோகா பீடம் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களிடம் நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்ட தொகை குறித்தும் வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. மேலும் ராம்தேவ் நிறுவனங்களில் இறுதிகட்ட சோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் ராம்தேவின் அறக்கட்டளைகள் இரண்டின் மீதும் அவரது உதவியாளர் பாலகிருஷ்ணன் மீதும் அமலாக்கப் பிரிவினர் வழக்குத் தொடர்ந்துள்ளனர். போலி பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி அவர் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாகவும் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாலகிருஷ்ணா எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
பாஸ்போர்ட் பெறுவதற்காக போலி ஆவணங்களைத் தாக்கல் செய்த வழக்கில் கடந்த மாதம் சிறைக்குப் போன பாலகிருஷ்ணன் தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications