3 ஆண்டுகளாக 400 லேப்-டாப்களை திருடிய சென்னை வாலிபர் கைது-நண்பருக்கு வலை!

சென்னையை அடுத்த தரமணி, துரைப்பாக்கம், திருவான்மியுர், பள்ளிக்கரணை, செம்மஞ்சேரி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து கடந்த ஒரு சில ஆண்டுகளாக லேப் டாப் திருட்டு தொடர்பான வழக்குகள் அதிகமாக பதிவாயின. ஐடி நிறுவன பணியாளர்களின் வீடுகள் மற்றும் விடுதிகளில் இருந்து, லேப்-டாப்கள் அதிகளவில் திருட்டு போயின.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போதும், யாரும் கைது செய்யப்படவில்லை. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட லேப்-டாப்கள் திருட்டு போனதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து தென்சென்னை இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் அடையாறு துணை கமிஷனர் சுதாகர் மேற்பார்வையில் துரைப்பாக்கம் உதவி கமிஷனர் முகமதுஅஸ்லாம் தலைமையில் போலீஸ் தனிப்படை அமைத்து, லேப் டாப் திருட்டு வழக்குகள் குறித்து விசாரித்தனர்.
இந்த நிலையில் சோழிங்கநல்லூரை அடுத்த ராஜீவ்காந்தி சாலையில் வசிக்கும் மகேந்திரன் என்பவரிடம், மர்மநபர் ஒருவர் கத்தி காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற செம்மஞ்சேரி போலீசார், கத்தி காட்டி மிரட்டிய வாலிபரை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட வாலிபரின் பெயர் பாலாஜி(25) என்பதும், அவர் எர்ணாவூர் பர்மா நகரில் குடும்பத்துடன் வசித்து வருவதும் தெரியவந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்ட பாலாஜி, கடந்த 3 ஆண்டுகளாக திருவான்மியூர், தரமணி, வேளச்சேரி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம், பழைய மாமல்லபுரம் சாலை ஆகிய பகுதிகளில் 400 லேப்-டாப்களை திருடியதை ஒப்பு கொண்டார்.
சாப்ட்வேர் நிறுவன பணியாளர்கள் தங்கியுள்ள வீடுகள் மற்றும் விடுதிகளில் ஏ.சி.மெக்கானிக், பிளம்பர், வாட்டர் டேங்க் கிளீனிங் போன்ற பணியாளர்களாக பாலாஜியும், அவரது நண்பர் சித்திக்கும் சென்றுள்ளனர். அங்கு தங்கியுள்ளவர்களின் கவனத்தை திசை திருப்பிவிட்டு, அங்கிருந்து லேப் டாப்கள், செல்போன்கள், பணம் ஆகியவற்றை திருட்டியுள்ளனர்.
திருடிய பொருட்களை சென்னை பர்மா பஜாரில் உள்ள சில புரோக்கர்களின் மூலம் பாலாஜியும், சித்திக்கும் சேர்ந்து விற்றுள்ளனர். இதனால் பாலாஜிக்கு உதவியாக இருந்த சித்திக் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பாலாஜியிடம் இருந்து 5 லேப்டாப், 2 பவுன் நகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பாலாஜி கடந்த 3 ஆண்டுகளில் திருடிய லேப்-டாப், செல்போன்கள் ஆகியவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி இருக்கலாம் என்று போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications