ஊட்டி லாட்ஜில் 3 பேருடன் தங்கியிருந்த பேராசிரியை மீட்பு!
ஊட்டி: கடத்தப்பட்டதாக கூறப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியையை ஊட்டியில் உள்ள ஒரு லாட்ஜிலிருந்து மீட்டுள்ளனர் போலீஸார்.
களியக்காவிளையைச் சேர்ந்தவர் டெபி. 28 வயதான இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது மகள் டெபியை காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திக் கொண்டு போய் விட்டதாக டெபியின் தந்தை பாபு போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கினர். டெபியின் செல்போன் சிக்னலை வைத்து அவர் ஊட்டியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ஊட்டி போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டி போலீஸாரும் ஒரு குழுவாக சிக்னலை கண்காணித்து வந்தனர். அப்போது ஒரு லாட்ஜில் 3 பேருடன் ஒரு பெண் இருப்பது தெரிய வந்தது. அவர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.
அப்போது அந்தப் பெண்தான் டெபி என்று தெரிய வந்தது. இதையடுத்து அவரை மீட்ட போலீஸார், டெபியின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர்.
அதன் பின்னர் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் டெபி ஒப்படைக்கப்பட்டார். அவர் கடத்தி வரப்பட்டாரா அல்லது மோசடியாக அழைத்து வரப்பட்டாரா அல்லது விரும்பி வந்தாரா, அவருடன் இருந்த மூவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.