சென்னை கல்லூரி பேராசிரியையை கடத்திய 3 பேர் சிறையில் அடைப்பு
நாகர்கோவில்: சென்னை கல்லூரி பேராசிரியை கடத்தப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமரி மாவட்டம் குழித்துறை பகுதியைச் சேர்ந்தவர் கில்பர்ட். பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் டெபி. சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆங்கிலத்துறை பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நேற்று திருமண நிச்சயர்த்தம் நடப்பதாக இருந்தது. இதற்காக ஊருக்கு வந்திருந்த டெபி கடந்த 18ம் தேதி மாயமானார். டெபியை இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் சிலர் காரில் கடத்திச் சென்று விட்டதாக கில்பர்ட் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார்.
அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் ரமேஷ் குமாரையும், டெபியையும் தேடி வந்தனர். இந்நிலையில் டெபியும், ரமேஷ் குமாரும், மேலும் சிலரும் ஊட்டியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ஊட்டி விரைந்து சென்ற போலீசார் அங்கு டெபியை மீட்டனர். மேலும் ரமேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் வினோத், திவாகர் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து களியக்காவிளை அழைத்து வந்தனர். அவர்கள் அனைவரும் இன்று களியக்காவிளை காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டனர். தொடர்ந்து ரமேஷ்குமாரும், அவரது நண்பர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.