காபி 'கப்'பால் கணவரை அடித்துக் கொன்ற யு.எஸ். டென்னிஸ் நடுவர் கைது
வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடுவராகப் பணியாற்றி வந்த 70 வயதுப் பெண், தனது கணவரை காபி கோப்பையால் அடித்துக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். பல மாதங்களா நடந்த விசாரணையின் இறுதியில் இந்த கைது நடவடிக்கையை லாஸ் ஏஞ்சலெஸ் போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
அந்தப் பெண்ணின் பெயர் லூயிஸ் ஆன் குட்மேன். 70 வயதாகும் இவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் பெயர் ஆலன், 80 வயது.
கடந்த ஏப்ரல் 17ம் தேதி போலீஸாரைத் தொடர்பு கொண்ட லூயிஸ், தனது கணவர் மாடிப்படியில் விழுந்து கிடப்பதாக தெரிவித்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீஸார் ஆலனின் உடலைக் கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர். முதலில் ஆலன் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பிரேதப் பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனையில், அவர் ஏதோ ஒன்றால் தாக்கிக் கொல்லப்பட்டிருக்கிறார் என்று தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தினர். லூயிஸை தொடர்ந்து விசாரித்து வந்தனர். இந்த விசாரணையில், காபி கோப்பையால் ஆலனை, லூயிஸ்தான் அடித்துக் கொலை செய்தார் என்று தெரிய வந்தது. இதையடுத்து தற்போது லூயிஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.
எதற்காக தனது கணவரை லூயிஸ் கொலை செய்தார் என்ற விவரத்தைப் போலீஸார் தெரிவிக்கவில்லை. அவருக்குக் கடும் தண்டனை கிடைக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதாவது அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கலாம் என்று லாஸ் ஏஞ்சலெஸ் மாவட்ட சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications