திருப்பூரில் வாகன நெரிசல்-75 வருட மரங்களை வேரூடன் பிடுங்கி இடமாற்றம்
திருப்பூர்: திருப்பூரில் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற 2 மரங்களை வேரூடன் பிடுங்கி, வேறு இடத்தில் நடப்பட்டது. இதன்மூலம் மரங்களை வெட்டி வீழ்த்துவது தவிர்க்கப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், ஊத்துக்குளி சாலையை அடுத்த டி.எம்.எப் மருத்துமனை அருகே ரயில்வே சுரங்க பாலம் அமைக்கும் பணி நிறைவு அடைந்தது. எனவே இதற்கான இணைப்பு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
இதற்கு இடையூறாக இருந்த சில கட்டிடங்கள், விநாயகர் கோயில் ஆகியவை அகற்றப்பட்டன. கோவிலில் இருந்த சிலை வேறு இடத்தில் நிறுவப்பட்டது. இந்த நிலையில் கோவிலின் அருகே கடந்த 75 ஆண்டுகளாக நின்ற வேம்பு, அரச மரங்களை வெட்டி அகற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில் மரங்களை வெட்டாமல், வேரூடன் பிடுங்கி வேறு இடத்தில் நடலாம் என்ற யோசனையுடன் திருப்பூர் நிப்டீ கல்லூரி நிர்வாகம் முன்வந்தது. ரயில்வே நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 2 மரங்களையும், ரூ.4 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்து கல்லூரி வளாகத்தில் நட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் நேற்று காலை 7 மணிக்கு துவங்கியது. இரு மரங்களின் வேர்களும் சுமார் 10 அடி ஆழத்திற்கு சென்றிருந்தது. அதை ஜே.சி.பி. உதவியுடன் வேரூடன் பிடுங்கி, மரத்தில் காய்ந்த கிளைகள் அகற்றப்பட்டு, சாலையில் கொண்டு செல்லப்பட்டது. இதற்காக சாலையில் குறுக்கே சென்ற மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
அதிக பாரம் கொண்டு செல்லும் லாரியின் மூலம், 7 கி.மீ. தொலையில் உள்ள கல்லூரி வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மரம் காய்ந்து போவதை தவிர்க்க, மரத்தில் வெட்டுப்பட்ட இடங்களில் மாட்டு சாணம் மற்றும் வேதிப்பொருட்கள் பூசப்பட்டது. கல்லூரி வளாகத்தில் குழி தொண்டப்பட்டு, இரவு 7 மணிக்கு 2 மரங்களும் கல்லூரி வளாகத்தில் நடப்பட்டன.
75 ஆண்டுகளாக வளர்ந்து நின்ற 2 மரங்களை வெட்டாமல், அவற்றிற்கு வாழ்வு கொடுத்த கல்லூரி நிர்வாகத்தை, இயற்கை ஆர்வலர்கள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications