கே.ராஜனின் கடைசி நொடிகள்.. மொபைலில் மெசேஜ் அனுப்பினாரா? சென்னை போலீசார் விசாரணை! இன்று இறுதி ஊர்வலம்
சென்னை: சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநருமான கே. ராஜனின் உடல் இன்று இறுதி சடங்குகளுக்குப் பிறகு நல்லடக்கம் செய்யப்படுகிறது.. நேற்று பிரேத பரிசோதனை முடிந்து குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் தலைவர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்..
தமிழ் திரைப்படத் துறையின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே. ராஜன் (85), கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியான 'பிரம்மச்சாரிகள்' திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார்.

டபுள்ஸ், அவள் பாவம், நினைக்காத நாளில்லை உள்ளிட்ட பல படங்களை தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கினார். 1991 ஆம் ஆண்டு வெளியான நம்ம ஊரு மாரியம்மா திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமானார். தொடர்ந்து உணர்ச்சிகள் உள்ளிட்ட படங்களையும் இயக்கினார்.
தயாரிப்பாளர் கே ராஜன்
கபடி கபடி, பாம்பு சட்டை, துணிவு, பகாசூரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்துள்ளார். தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் கே. ராஜன்.
கடந்த சில வருடங்களாகவே திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள் மற்றும் திரைத்துறை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று, சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள், நடிகர்-நடிகைகளின் சம்பள உயர்வு மற்றும் தயாரிப்பாளர்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்கள் குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வந்தார்.
இளம் இயக்குநர்களுக்கு குறைந்த செலவில் திரைப்படம் தயாரிப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கி வந்த இவர், சமீபத்தில் நடைபெற்ற ப்ராமிஸ் திரைப்பட விழாவில் பங்கேற்றதே அவரது கடைசி பொதுநிகழ்ச்சியாகும். கே. ராஜனின் மறைவுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய் உள்பட தமிழ் திரைப்படத் துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கே ராஜன் தற்கொலைக்கு காரணம்?
இந்தத் துயரமான முடிவுக்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் குறித்து பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. கே. ராஜன் கடந்த சில காலமாகவே மன உளைச்சலில் இருந்ததாகவும், திரைத்துறையில் நிலவி வரும் சில மறைமுக நெருக்கடிகள் மற்றும் வயது முதிர்வு சார்ந்த தனிப்பட்ட காரணங்களால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும் நெருங்கிய வட்டாரங்களில் பேசப்படுகிறது.
குறிப்பாக, சிறிய தயாரிப்பாளர்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவருக்கு, திரையுலகில் ஏற்பட்ட சில ஏமாற்றங்கள் மன ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்கிறார்கள்.
மெசேஜ் அனுப்பினாரா
போலீஸ் தரப்பில் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு ஆற்றில் அவர் குதித்த போது அங்கிருந்த சாட்சிகளிடமும், அவரது குடும்பத்தினரிடமும் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். முதற்கட்ட விசாரணையின்படி, இது சந்தேகத்திற்கு இடமில்லாத தற்கொலை தான் என்பதை போலீஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்னதாக ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா அல்லது யாருக்கேனும் மெசேஜ் அனுப்பினாரா என்ற கோணத்திலும் அடையாறு போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இன்று உடல் அடக்கம்
இந்நிலையில், கே ராஜன் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. நேற்று முன்தினம் சென்னை அடையாறு ஆற்றில் கே. ராஜன் திடீரென குதித்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நேற்று போஸ்ட் மார்ட்டம் முடிந்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினரின் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.. இன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெற்று, சென்னை மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக குடுமபத்தினர் அறிவித்துள்ளனர்.. திரையுலகின் ஒரு சகாப்தம் இப்படி ஆற்று நீரில் மூழ்கித் தற்கொலையோடு முடிவடைந்தது அனைவரையும் மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications