நெல்லையில் கடும் வெயில்... கேந்திப் பூக்கள் அழுகிவிடுவதால் வியாபாரிகளுக்கு கடும் நஷ்டம்!
தென் மாவட்டங்களில் மலர் விற்பனையில் மதுரையில் உள்ள தோவாளைக்கு அடுத்தபடியாக நெல்லையில் உள்ள சங்கரன்கோவில் பூ மார்க்கெட் பிரபலமாக உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது நிலவி வரும் கடுமையான வறட்சியால் பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. மேலும் கேரளாவில் ஒணம் பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் மல்லி, பிச்சி, கனகம்பரம் ஆகியவை கிலோ ரூ.300க்கும், கேந்தி, அரளி ஆகியவை ரூ.75, சம்மங்கி, செவ்வந்தி ஆகியவை ரூ.80 விலைக்கு விற்கப்படுகிறது.
சங்கரன்கோவில் பூ வியாபாரிகள் ஓசூரில் இருந்து கேந்தி பூக்களை வரவழைத்து வி்ற்பனை செய்து வருகின்றனர். ஒரு கிலோ ஓசூர் கேந்தி பூக்கள் ரூ.50 வரை விற்பனையாகிறது. 4 நாட்கள் வரையில் வாடாமல் இருப்பதால், இப்பகுதியில் ஓசூர் கேந்திக்கு மவுசு அதிகம்.
கடந்த சில நாட்களாக சங்கரன்கோவிலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஓசூரில் வரவழைக்கப்பட்ட கேந்தி பூக்கள் அனைத்தும் விரைவில் அழுகி நாசமாயின. இதையடுத்து பூக்களை விற்க முடியாமல் வியாபாரிகள் குப்பையில் கொட்டி சென்றனர்.